கொள்கை முடிவு என்ற பெயரில் எல்லா திட்டங்களையும் மாற்றி மக்கள் வரிப்பணத்தை வீணாக்காதீர்கள் - உயர்நீதிமன்றம்!

author img

By

Published : May 14, 2022, 9:37 PM IST

MHC

முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களை, கொள்கை முடிவு என்ற பெயரில் புதிய அரசு மாற்றுவதால் மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை: கூட்டுறவு சங்கங்களின் இளநிலை உதவியாளர், உதவி பதிவாளர் பணியிடங்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிறுவனத்தை சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டத்தில் உள்ள செம்மடுவு கிராமத்தில் 4.33 ஏக்கரில் 61 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க, கடந்த அதிமுக ஆட்சியில் முடிவெடுத்து, கூட்டுறவுத்துறை சார்பில் அரசாணையும் பிறப்பித்து, கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டது.

பின்னர், திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு நடந்த ஆய்வு கூட்டத்தில், ஏற்காட்டில் மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிறுவனம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்து, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள மன்னவனூர் கிராமத்தில் தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தை அமைப்பது என கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவெடுக்கப்பட்டது. இதனால், ஏற்கனவே நடைபெற்று வந்த ஏற்காடு பயிற்சி நிலைய கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவையும், அரசாணையையும் ரத்து செய்யக்கோரி ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு (LAMP)கூட்டுறவு சங்கத்தின் தலைவரான ஜி. சென்றாயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் இன்று (மே 14) தீர்ப்பளித்துள்ளார்.

அதில், "ஏற்காட்டில் அமைய இருந்த பயிற்சி மையத்தை கொடைக்கானலுக்கு மாற்றுவது துறை ரிதியான முடிவு இல்லை, முதல்வர் கலந்து கொண்ட ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பதால், அதை அரசின் கொள்கை முடிவாகத்தான் கருத முடியும் என தெரிவித்துள்ளார். இந்த வழக்கை பொறுத்தவரை மாநில அளவிலான மையம் அமைக்க வேண்டுமா? அல்லது தேசிய அளவிலான மையம் அமைக்க வேண்டுமா? என்பது அரசின் கொள்கை முடிவுடன் தொடர்புடையது என்பதால், இதில் எந்த முடிவு சரியானது என நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியாது, அந்த கொள்கை முடிவு தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டதாக கருதினால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே மாநில அளவிலான இரண்டு மையங்கள் உள்ள நிலையில், எவ்வித விவாதங்களும் நடத்தப்படாமல் மேலும் ஒரு மாநில அளவிலான மையத்தை அமைக்க அவசியம் இல்லை என பின்னர் வந்த அரசு எடுத்த முடிவில் தவறு இருப்பதாக காணமுடியாது, மேலும் ஏற்காட்டில் மாநில அளவிலான மையத்தை கைவிடும் முடிவை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என கூறி, சென்றாயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு முடிவை எடுத்து அதில் நடவடிக்கையை தொடங்கிய நிலையில், அடுத்து வரக்கூடிய அரசு, முந்தைய அரசின் கொள்கை முடிவை மறு ஆய்வு செய்யலாம் என்றும், அவ்வாறு செய்யும்போது ஏற்கனவே செலவு செய்த தொகை வீணாவதை தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தினார்.

2006-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரை ஆட்சி புரிந்த அரசு ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவில் சட்டமன்ற கட்டிடம் கட்டிய நிலையில், 2011-ல் பொறுப்பேற்ற புதிய அரசு, ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றியதை எதிர்த்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என கூறி, புதிய அரசின் முடிவை மாற்ற முடியாது என உத்தரவிட்டதையும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். சில துறைகளை பொறுத்தவரை முந்தைய அரசு எடுத்த முடிவு, மக்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் முடிவாக இருந்தாலும் கூட அவற்றை கைவிடாமல் அடுத்தடுத்து வரும் அரசுகள் அந்த கொள்கை முடிவகளை ஏற்றுக்கொண்டுள்ளது. உதாரணமாக, மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை அரசே நடத்தும் என்ற முந்தைய அரசின் கொள்கை முடிவை மட்டும், மாநில அரசின் வருவாய்க்காக அடுத்தடுத்து வந்த அரசுகள் பின்பற்றி வருவதாகவும் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய அரசு மக்கள் நலனுக்காகவும் சமுதாய நலனுக்காகவும் ஒரு திட்டத்தை தொடங்கிவிட்டால், பின்வரும் அரசு அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தலாம். ஒரு திட்டத்தில் பெருந்தொகை செலவு செய்யப்பட்டிருந்தால், அவ்வாறு செலவிட்ட தொகை அரசின் கொள்கை மாற்றத்தால் வீணாகாமல் இருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும். வேறொரு கட்சி தலைமையில் அரசு இருந்தது என்ற ஒரே காரணத்திற்காக, பின்னர் பொறுப்பேற்கும் மற்றொரு கட்சி தலைமையிலான அரசு, எல்லா முடிவுகளையும் மறு ஆய்வு செய்ய அவசியம் இல்லை என்றும், ஒருவேளை மக்களுக்கும் சமுதாயத்திற்கும் பயன்தராத வகையில் இருந்தால் அதை மறு ஆய்வு செய்யலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளார்".

இதையும் படிங்க: மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கு - குற்றவாளிகளிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.