நடிகர் சிவாஜி சொத்து பிரச்சினை -  பிரபு மீது சகோதரிகள் வழக்கு

author img

By

Published : Jul 7, 2022, 10:59 AM IST

Updated : Jul 7, 2022, 11:36 AM IST

சிவாஜி சொத்து பிரச்சனை: நடிகர் பிரபு மீது சகோதரிகள் வழக்கு

தந்தை சொத்தில் பங்கு தராமல் ஏமாற்றிவிட்டதாக நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார் மீது குற்றஞ்சாட்டி மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் மகள்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சென்னை: மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் என இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர். 2001ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் உயிரிழந்ததற்கு பின், 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும் வீடுகளின் வாடகை பங்கை வழங்காமல் சகோதரர்கள் தங்களை ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி, ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும், அந்த மனுவில், ‘இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் காரணமாக, தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளதால் பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும். மேலும், தங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துக்களை அவர்கள் விற்றுள்ளனர்.

சாந்தி தியேட்டர் பங்கிலும் பிரச்சினை: அந்த விற்பனை பத்திரங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும். ஆயிரம் சவரன் தங்க நகைகளையும், 500 கிலோ வெள்ளி பொருள்களையும் பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டனர். சாந்தி தியேட்டரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பிரபுவும், ராம்குமாரும் அவர்களின் பெயருக்கு மாற்றியுள்ளனர்.

தந்தை சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது. பொது அதிகார பத்திரத்தில் கையெழுத்து பெற்று தங்களை ஏமாற்றி விட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகர் பிரபு, ராம்குமார் தவிர, இருவரின் மகன்களாக விக்ரம் பிரபு, துஷ்யந்த் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:'இளையராஜாவுக்கு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்' - கமல்ஹாசன் ட்வீட்

Last Updated :Jul 7, 2022, 11:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.