’மெய்நிகர் பணம் நாட்டின் பொருளாதாரத்தைத் தகர்க்கும்’ - எச்சரிக்கும் சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்!

author img

By

Published : Nov 18, 2021, 6:14 PM IST

Vinoth Arumugam interview, cryptocurrencies are not safe, details about cryptocurrency, cryptocurrency explained in tamil, cryptocurrency tamil explanation, what is cryptocurrency tamil, கிரிப்டோகரன்சி நாட்டின் பொருளாதாரத்தை தகர்க்கும், வினோத் ஆறுமுகம், சைபர் பாதுகாப்பு ஆய்வாளர், மெய்நிகர் பணம் என்றால் என்ன, கிரிப்டோகரன்சி

மெய்நிகர் பணம் (கிரிப்டோகரன்சி) நாட்டின் பொருளாதாரத்தையே தகர்க்கும் என சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் வினோத் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

தற்போது உலகம் முழுவதும் இணையதள பணப் பரிவர்த்தனை என்பது எளிதாக நடைபெற்று வருகிறது. மேலும், இதற்கு அடுத்த கட்டமாக இணையதளத்தில் கிரிப்டோகரன்சி குறித்து தேடுதலும், அதில் வைப்புத்தொகையை இடுவதிலும் அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிரிப்டோகரன்சி என்றால் என்ன என்பது குறித்தும், அதன் சாதக, பாதகங்கள் குறித்தும் சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் வினோத் ஆறுமுகம் நம்மிடம் உரையாடினார். அவர் உடனான சிறப்பு நேர்காணலைக் காணலாம்.

கிரிப்டோகரன்சி என்றால் என்ன?

”கிரிப்டோகரன்சி என்பது கையில் எடுத்து செலவு செய்கின்ற பணம் போன்றது அல்ல. அது இணையதள பணம் (Digital money). இந்தப் பணம் என்பது யாரிடம் இருந்து வருவது என்றும் தெரியாது; யாருக்குப் போகிறது என்றும் தெரியாது. அரசு இதனை கட்டுப்படுத்தக் கூடாது, இதற்காகவே ’கிரிப்டோகரன்சி’ உருவாக்கப்பட்டது.

யாருக்காக அனுப்பப்படுகிறது, பெறப்படுகிறது என்பதை மறைக்க ரகசியக் குழுக்களால் உருவாக்கப்பட்டது கிரிப்டோகரன்சி ஆகும். இதை ஒரு சமூகத்தில் கொண்டு வருகிறீர்கள் என்றால், ஒரு நாடு அங்கீகரிக்கிறது என்றால் ஒரு பரிசோதனை அடிப்படையில் தான் நடைபெறும்.

ஏனெனில், ஒரு அரசாங்கத்தால் கிரிப்டோகரன்சியை கட்டுபடுத்த முடியாது. அதன் விலை ஏற்ற இறக்கத்தை, தடை செய்ய முடியாது. அதனை யார் பயன்படுத்துகின்றனர் என்று கண்டுபிடிக்க முடியாது. இதற்காக வரி ஏற்படுத்த முடியாது. இதனால் நாடுகள் கிரிப்டோகரன்சியை அங்கீகரிப்பது மிகக் குறைவு. இது முழுக்க முழுக்க இணையத்தில் உருவாக்கக்கூடிய, டார்க் நைட்டில் நடக்கிற டிஜிட்டல் பண வர்த்தகமாகும்.

கிரிப்டோகரன்சியை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள்

கிரிப்டோகரென்சி பணத்தை போதை மருந்து விற்பவர்கள், குழந்தைகளை வைத்து தவறாக படம் எடுப்பவர்கள், நிழல் உலக ஆசாமிகள், பயங்கரவாதிகள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்தியாவில் இதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கவில்லை என்றாலும், உச்ச நீதிமன்றம் செயலிக்கு விதித்திருந்த தடையை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. செயலி வழக்கம் போல் செயல்பட அனுமதியுள்ளது.

வரி ஏய்ப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்

கிரிப்டோகரன்சி இன்று உலகம் முழுவதும் நூற்றுகணக்காக காணப்படுகிறது. அதில் முக்கியமான ஐந்து கிரிப்டோகரன்சிக்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • பிட்காயின்- ரூ. 47,97,000
  • ஈதரியம்- ரூ. 3,41,000
  • பினான்ஸ் காயின்- ரூ. 43,429
  • ரிப்பிள் (எக்ஸ்.ஆர்.பி) - ரூ. 88
  • டெதர் - ரூ. 74

இவ்வாறாக பல்வேறு கிரிப்டோகரன்சிகள் உள்ளன. கிரிப்டோகரன்சி வாங்கி வைப்பதன் மூலம் வரி ஏய்ப்பு செய்யலாம். மேலும் கிரிப்டோகரன்சி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக 35,000 டாலருக்கு வாங்கிய ஒரு கரன்சி, வருகின்ற காலங்களில் 3500 டாலராக சரிவைக் காணலாம்.

அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்ன் கிரிப்டோகரன்சி மூலம் டெஸ்லா கார் வாங்கலாம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், சீன அரசு கிரிப்டோகரன்சியை முழுமையாகத் தடை செய்துள்ளது. இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் இதனை வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளிவருகிறது. ஆனால், உறுதியாக சொல்ல முடியவில்லை.

ஹேக்கர் கையில் சிக்கினால் அவ்வளவுதான்

கிரிப்டோகரன்சியை எளிதாக ஹேக்கர்கள் ஹேக் செய்து வெளி நபர்களிடம் இருந்து கரன்சியை எடுத்துக் கொள்ளலாம். இது முழுக்க முழுக்க இணையதளம் மூலமே நடப்பதால் ஹேக் செய்வது சுலபமாகும். சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் ஐந்து கிரிப்டோகரன்சிகள் ஹேக் செய்யப்பட்டதாக புகார் வந்திருந்தது.

நாட்டின் பொருளாதாரம் உயர வாய்ப்பில்லை

கிரிப்டோகரன்சி நாட்டின் பொருளாதாரத்தைத் தகர்க்குமே தவிர நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு சாத்தியமில்லை. மேலும், கிரிப்டோகரன்சியை உருவாக்கும் தனியார் செயலி நிறுவனத்துக்கு மட்டுமே லாபம் கிடைக்கும்.

இந்த செயலி மூலம் இலவசமாகவும் அல்லது குறிப்பிட்ட விழுக்காட்டிலும் சேவைக் கட்டணம் பிடித்தம் போக கிரிப்டோகரன்சி வழங்கப்படுகிறது. தற்போது கிரிப்டோகரன்சி குறைந்தபட்சம் ஐந்து ரூபாயிலிருந்து கிடைக்கிறது.

இதற்கு மாதாமாதம் அல்லது வைப்புத் தொகையாக ஒரு தொகையைக் கொண்டு கிரிப்டோகரன்சி வாங்கிக் கொள்ளலாம். இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு ஒன்றிய அரசு அனுமதி தரவில்லை.

100% போலியான கரன்சி

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை அறிந்து தொழில்நுட்பம் தெரிந்து செய்தால் நல்லது. கிரிப்டோகரன்சி குறித்து தெரிந்துகொள்ள இணையதளத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன.

தற்போதைய உலகம் ஏமாற்றும் உலகம் என்பதால் 100 விழுக்காடு கிரிப்டோகரன்சி போலியாக உருவாக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இது எங்கு யாரால் உருவாக்கப்பட்டது என்று யாராலும் கூற முடியாது. விழிப்புணர்வுடன் இருந்து தொழில்நுட்பம் தெரிந்து ஈடுபட்டால் தப்பிப் பிழைத்துக் கொள்ளலாம்.

கற்றுக் கொள்ளுங்கள், பணம் அதிகம் இருந்தால் இன்வெஸ்ட்மெண்ட் செய்யலாம். தயவுசெய்து கடன் வாங்கி செய்ய வேண்டாம். இதில், 100 விழுக்காடு பொய்யான கரன்சியையும் செயலியையும் உருவாக்க சாத்தியமுள்ளது.

கிரிப்டோகரன்சி குறித்து புகார் அளிக்க முடியாது

தொழில்நுட்பம் தெரியாமல் இதில் ஈடுபட்டால் 100 விழுக்காடு ஏமாறுவதற்கு வாய்ப்பு அதிகம். மேலும், இதில் பணத்தை ஏமாந்தால் தனியாக புகார் அளிக்க முடியாது. இந்திய அரசு முடிந்தால், ஏதேனும் செய்ய வாய்ப்புள்ளது.

ஆனால் உறுதியாக சொல்ல முடியாது. தற்போதைய இந்திய அரசு இதற்காக கமிஷன் அமைத்து உள்ளதாகவும், வருகின்ற ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் இதற்கான முடிவு தெரியவரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதுவரை இந்திய அளவில் எந்த ஒரு புகாரும் இதுகுறித்து பதிவாகவில்லை.

எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்

கிரிப்டோகரன்சியில் பொதுமக்கள் இன்வெஸ்ட்மெண்ட் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படி செய்யப் போகிறீர்கள் என்றால் உங்களிடம் அதிக பணம் இருந்தால் செய்யலாம். கடன் வாங்கியோ வட்டிக்கு வாங்கியோ செய்ய வேண்டாம்.

வருங்காலங்களில் இந்த ஆப்கள் தடை செய்யப்பட்டால் இந்தப் பணத்தை பெற முடியாது, இதற்காக வழக்குப் பதிவு செய்ய முடியாது. பணத்தை திரும்பப் பெறுவது என்பது 0.5 விழுக்காடு கூட கிடையாது. கற்றுக்கொண்டு இதில் இறங்குவது சிறந்தது.

அனைத்துமே ஆன்லைன் பணப் பரிவர்த்தனை என்பது பேரிடர் காலங்களில் மின்சாரம் துண்டிப்பு, போலிகள், உள்ளிட்ட காரணங்களால் இழப்பு ஏற்படலாம்” என்றார்.

சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் வினோத் ஆறுமுகம் பேட்டி

பிரதமர் மோடி அதிரடி

இன்று சிட்னி கருத்தரங்கில் காணொலிக் காட்சி வாயிலாக பேசியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, "கிரிப்டோகரன்சியிடமிருந்து வர்த்தகத்தை பாதுகாக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தவறானவர்கள் கைகளில் இது செல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது நம் கடமையாகும். இளைஞர்கள் இதனால் தங்களின் வாழ்க்கையைத் தொலைக்க நேரிடும்.

தொழில்நுட்பம் மாறிவரும் சூழலில் நாமும் அதனுடன் பயணிக்க வேண்டியது கட்டாயமாகிறது. அதே வேளையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் அடுத்த பரிமாணத்தை நாம் பாதுகாப்பானதாக ஏற்படுத்தித் தர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரெய்டில் சிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு? - லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.