பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் முடிவெடுப்பார் - அமைச்சர் அன்பில் மகேஷ்

author img

By

Published : Sep 16, 2021, 4:00 PM IST

அமைச்சர் அன்பில் மகேஷ்

ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சர் முடிவெடுத்து அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அலுவலகத்தின் கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்த வேண்டிய அறிவிப்புகள் குறித்து அலுவலர்களுடன், அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (செப். 16) ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மணிகண்டன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மேலாண்மை திட்ட இயக்குநர் சுதன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அறிவிப்புகளை நிறைவேற்ற வேண்டும்

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக 28 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. துறையின் அறிவிப்புக்கு ஒருவர் பொறுப்பு என்பது போல் அலுவலர்களுக்கு பணிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. திட்டங்களை செயல்படுத்தும் பணிகளில் அலுவலர்கள் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மானியக் கோரிக்கையின்போது அனைத்து தரப்பினர் பாராட்டை பெற்றிருந்தாலும், அறிவித்த திட்டங்களை நிறைவேற்றினால்தான் அடுத்த கூட்டத்தொடரிலும் பாராட்டை பெறமுடியும். அதற்கான, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் முடிவெடுப்பார்

பள்ளிகள் திறப்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ஒவ்வொரு கருத்து உள்ளது. தரப்பட்ட கருத்தின் அடிப்படையில் முதலமைச்சரிடம் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை பள்ளிகளை திறப்பது குறித்து மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சர் முடிவெடுத்து அறிவிப்பார். ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை திறக்கலாமா அல்லது ஆறு முதல் எட்டாம் வகுப்புவரை திறக்கலாமா என்பது குறித்தும் அவரிடம் கூறியுள்ளோம்.

கட்டாயப்படுத்தக் கூடாது

சில தனியார் குழந்தைகளை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்துவது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குழந்தைகளை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தும் காலகட்டம் இதுவல்ல; குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு வர யாரும் வற்புறுத்த வேண்டாம். இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது.

பள்ளிகள் திறந்த பிறகு இதுவரை 148 மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றை காட்டிலும் மிகப்பெரிய பாதிப்பாக இருப்பது, வீட்டில் இருப்பதால் குழந்தைகளின் மனரீதியாக பாதிக்கப்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

பள்ளிகளில் இடைநிற்றல் குழந்தைகளை கணக்கெடுக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளுக்கு வர வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேர்வு முடிவுக்கு பின் முடிவெடுக்கப்படும்

நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்படவில்லை, அது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு முடிவின் அடிப்படையில் பயிற்சி முறைகளை மேம்படுத்துவதா அல்லது மாணவர்களின் திறனை மேம்படுத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் அறிவிப்பில் உள்ள குளறுபடிகளை சரி செய்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் உள்ள பிரச்சனை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் போடப்பட்ட அரசாணையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன அவற்றை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது" என்றார்.

இதையும் படிங்க: 148 மாணவர்களுக்கு கரோனா - அமைச்சர் அன்பில் மகேஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.