வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வாயிலாக ரூ.26.31 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வாயிலாக 26 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கோட்ட அலுவலகக் கட்டடம், வீட்டு வசதி பிரிவு அலுவலக வளாகம், துணைக்கோள் நகரக் கோட்ட அலுவலகக் கட்டடம் மற்றும் விருந்தினர் மாளிகை ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டடங்களை திறந்து வைத்தார்.
மேலும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியமானது சமூகத்தின் பல்வேறு வருவாய்ப்பிரிவினர், தொழில்துறை ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் அனைவருக்கும் வீடு வழங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான வீட்டுவசதி தீர்வுகளை வழங்கி வருகிறது. மேலும் தற்போது இவ்வாரியம் உயரமான கட்டடங்கள், வணிக மற்றும் அலுவலகக் கட்டடங்கள், மறுகட்டுமானத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி திட்டப்பகுதி 1-ல் 7 கோடியே 37 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய கோட்ட அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், சாத்தனூர் கிராமம் கே.கே. நகரில், 1.39 ஏக்கர் பரப்பளவில் 11 கோடியே 55 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி வீட்டு வசதிப்பிரிவு அலுவலக வளாகம்; மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், தோப்பூர் கிராமத்தில் தோப்பூர் தன்னிறைவு திட்டப்பகுதியில் 4 கோடியே 50 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உச்சப்பட்டி தோப்பூர் துணைக்கோள் நகரக் கோட்ட அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், உச்சப்பட்டி கிராமத்தில் உச்சப்பட்டி பகுதி-VIIஆவது திட்டப் பகுதியில், 2 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகை என மொத்தம் 26 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்துவைத்தார்.
இதையும் படிங்க:சென்னையில் ஆளுநர் நடத்தும் உயர்கல்வி மாநாடு!
