மெரினாவில் தொடரும் சோகம்: இறப்பைத் தடுப்பதற்குப் புதிய அவசர உதவி மையம்!

author img

By

Published : Oct 12, 2021, 9:21 AM IST

chennai police starts marina death prevention task force

மெரினா கடற்கரையில் குளிக்க வருபவர்கள் அலையில் சிக்கி மரணம் அடைவதைத் தடுக்கும் வகையில் புதிய அவசர உதவி மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

சென்னை: மெரினா கடற்கரை கடந்த மாதம் ஆகஸ்ட் 23ஆம் தேதி ஊரடங்கு உத்தரவிற்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி மெரினா கடற்கரை திறக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை சுமார் 13 பேர் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என மெரினா கடற்கரையில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றை மீறி குளிக்க வருவது வாடிக்கையாக உள்ளது. குடும்பத்தினருடன் வருபவர்களும் மெரினா கடற்கரையில் குளிப்பது வாடிக்கையாக இருக்கிறது.

இந்த நிலையில் அடுத்தடுத்து பள்ளி கல்லூரி மாணவர்கள் மெரினா கடற்கரைப் பகுதியில் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. எனவே மனித உயிர்களைக் காக்கும்பொருட்டு அவசர உதவி மையம் செயல்படுத்துவதற்கு திருவல்லிக்கேணி காவல் துறையினர் முடிவுசெய்தனர். அதன்படி தற்போது ஒருங்கிணைந்த அவசர உதவி மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

ஏற்கனவே மெரினா கடற்கரையில் அலையில் சிக்குபவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் 24 மணி நேரமும் 25 வீரர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதுதவிர அலையில் யாராவது சிக்கிக் கொண்டால் அது தொடர்பான தகவல்கள் பரிமாறப்பட்டு கடலோர காவல்படை, கடலோரப் பாதுகாப்புக் குழுமம் உள்ளிட்ட துறைகளும் ஹெலிகாப்டர், ரோந்துப் படகு மூலம் மீட்புப் பணியில் ஈடுபடுவது நடைபெற்றுவருகிறது.

வாட்ஸ்அப் குழு

இந்த நிலையில் தனித்தனியாகச் செயல்படும் இந்தத் துறைகளை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் அனைவருக்கும் தகவல் கொடுக்கும் வகையில் திருவல்லிக்கேணி காவல் துறையினர் அவசர உதவி மையம் ஒன்றை தொடங்கியுள்ளனர்.

மீட்புப் பணியில் ஈடுபடும், தீயணைப்புத் துறை, கடலோர காவல்படை, கடலோரப் பாதுகாப்புக் குழுமம், சென்னை காவல் துறை ஆழ்கடல் நீச்சல் தெரிந்த மீனவர்கள் எனப் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து வாட்ஸ்அப் குழு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

அலையில் சிக்கிக் கொள்பவர்கள் தொடர்பான தகவலை திருவல்லிக்கேணி காவல் துறையினருக்கு 94981 00024 என்கிற எண்ணிற்குத் தொடர்புகொண்டு அளித்தால், அவசர உதவி மையத்தில் உள்ள காவலர்கள் தகவலின் உண்மைத்தன்மையை உறுதிசெய்த பின்னர் மீட்புப் பணி வாட்ஸ்அப் குழுவில் அந்தத் தகவலை பரிமாறுவார்கள்.

ஒரே நேரத்தில் மீட்புப் பணியில் ஈடுபடும் அனைத்துத் துறைகளுக்கும் தகவல் கொடுக்கப்படுவதால் உடனடியாக மீட்புப் பணி நடைபெற்று அலையில் சிக்கும் நபரை உயிருடன் மீட்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என திருவல்லிக்கேணி உதவி ஆணையர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், நீண்ட கடற்கரையான மெரினாவில் குளிப்பவர்களைத் தடுப்பதற்கு காவல் துறையினரின் நேரடி ரோந்துப் பணி மட்டும் போதாது, கடலில் குளிப்பவர்களைக் கண்காணிப்பதற்கு கண்காணிப்பு கேமரா பொருத்திய அதிநவீன கோபுரங்கள் மூன்று நிறுவப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே மெரினா கடற்கரைப் பகுதியில் அலையில் சிக்கி இறப்பவர்களைத் தடுக்கும் வகையில் மெரினா மீட்புக்குழு என்கிற பல்துறைகளைச் சேர்த்து ஒருகிணைந்த குழு உருவாக்கும் திட்டம் தயாராகிவரும் நிலையில், அதற்கு முன்னோட்டமாக மெரினா கடற்கரையில் அவசர உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மெரினா பீச்: பாதுகாவலர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை - நடவடிக்கை எடுக்குமா அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.