சென்னை: நடிகை அளித்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கட்டாயக் கருக்கலைப்பு, பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் வழக்கிற்கான உரிய ஆதாரங்களைத் திரட்டி கடந்த ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
சாட்சிகளிடம் ரகசிய வாக்குமூலம்
பின்னர் அவரை இரண்டு நாள்கள் காவலில் எடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். வழக்கின் முக்கிய ஆதாரமாக மணிகண்டனின் இரண்டு செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து அவரது நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே குற்றஞ்சாட்டிய நடிகை, வழக்கில் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் மருத்துவர் அருண்குமார் உள்ளிட்ட சாட்சிகளிடம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்நிலையில் மணிகண்டன் மீது போடப்பட்ட வழக்கில் 341 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், அவர் மீதான வழக்கில் ஏற்கனவே பதிவு செய்யபட்ட ஆறு பிரிவுகளுடன் சேரத்து மேலும் இரண்டு பிரிவுகளையும் சேர்த்து அடையாறு அனைத்து மகளிர் காவல் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கில் நடிகையோடு சேர்த்து ஐந்து பேர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் அலுவலரை மிரட்டிய விவகாரம்: அதிமுகவை சேர்ந்த 4 பேர் கைது