திருப்பூரில் 26 இறைச்சிக் கடைகள் அகற்றம்: வழக்கை முடித்துவைத்த நீதிமன்றம்

author img

By

Published : Aug 7, 2021, 12:21 PM IST

சென்னை உயர் நீதிமன்றம்

மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியில் அனுமதியின்றிச் செயல்பட்ட 26 இறைச்சிக் கடைகள் அகற்றப்பட்டுவிட்டதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பூர் மாநகராட்சி அறிக்கைத் தாக்கல்செய்ததை அடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

திருப்பூர்: மாநகராட்சியில் உள்ள 368 இறைச்சிக் கடைகளில் 26 கடைகள் எந்த அனுமதியுமின்றி, ஊரடங்கு காலத்தில் இயங்கிவருவதாகவும், அந்தக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் திருப்பூர் மாநகராட்சி சார்பில் அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்டது. அதில், "மாநகராட்சிக்குள்பட்ட சுமார் 368 இறைச்சிக் கடைகளில் 26 கடைகள் அனுமதியின்றி செயல்பட்டுவந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பிறகு அனுமதியின்றி செயல்பட்ட 26 கடைகள் அகற்றப்பட்டன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனுமதியின்றி செயல்பட்டுவந்த பழம், காய்கறி கடைகளும் அகற்றப்பட்டுவிட்டதாக திருப்பூர் மாநகராட்சி சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்டது. அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கருணாநிதி நினைவிடத்தில் 'ஒரு இரகசியம்' - வெளியிட்ட வைரமுத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.