ஜிஎஸ்டி வரம்பு, விலக்கு ஆகியவற்றை மதிப்பாய்வு செய்ய அமைச்சர்கள் குழு

author img

By

Published : Sep 27, 2021, 10:40 PM IST

Updated : Sep 28, 2021, 12:02 AM IST

Two ministerial panels to review GST exempt list

துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையிலான அமைச்சர்கள் குழு ஜிஎஸ்டி அமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சர்கள் குழு, ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றி அமைக்க அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லி: தற்போது அமலில் உள்ள ஜிஎஸ்டி வரி படிநிலை குறித்து ஆராயப்பட்டதைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி அமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்காக 2 அமைச்சர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

வரி கட்டமைப்பிற்குள் "சிறப்பு விகிதங்களை" மதிப்பீடு செய்வது, விகித கட்டமைப்பை எளிதாக்குவது, வரி விகித அடுக்குகளை ஒன்றிணைத்தல், வருவாயை அதிகரிக்க ஏய்ப்புக்கான சாத்தியமான ஆதாரங்களை அடையாளம் காணுதல் ஆகியவை இக்குழுக்களின் பொறுப்புகளாகும்.

இதற்காக, ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் இரண்டு அமைச்சர்கள் அடங்கிய குழுவை உருவாக்கியுள்ளது. மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையிலான அமைச்சர்கள் குழு ஜிஎஸ்டி அமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சர்கள் குழு, ஜிஎஸ்டி வரி விகிதத்தை மாற்றி அமைக்க உருவாக்கப்பட்டுள்ளது.

வரி படிநிலை

இந்த அமைச்சர்கள் குழுவானது, செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரிபடிநிலை ஆய்வறிக்கை சேர்க்கப்படாததைத் தொடர்ந்து அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் வரி படிநிலை நிலை குறித்து அமைச்சர்கள் குழு ஆராய உள்ளது. தற்போது ஐந்து படிநிலைகளில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வரி படி நிலைகளை ஒன்றிணைப்பது குறித்தும் அமைச்சர்கள் குழு ஆராயும்.

வரி விகிதம் பகுப்பாய்வு குழுவினர், சிறப்பு விகிதங்களையும் சேர்த்து ஜிஎஸ்டியின் தற்போதைய விகித படிநிலை கட்டமைப்பையும், ஜிஎஸ்டியில் எளிமையான விகித அமைப்பிற்குத் தேவையான வரி விகித படிநிலையை இணைப்பது உள்பட வரி விகிதத்தை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களையும், குறுகிய மற்றும் நடுத்தர காலங்களில் செயல்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களுக்கான நடைமுறை வரைபடத்தையும் அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கலாம் ஒன்றிய நிதியமைச்சர் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த குழு உடனடி நடவடிக்கைகளுக்கு இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பிக்கலாம். முழுமையான அறிக்கையை இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

வரி விகிதம் மாற்றி அமைக்கும் குழு

வரி விகிதம் மாற்றி அமைக்கும் குழுவில் பீகார் துணை முதலமைச்சர் தர்கிஷோர் பிரசாத், கோவாவின் போக்குவரத்து மற்றும் சட்டப்பேரவை விவகாரங்களுக்கான அமைச்சர் மவுவின் கோடின்ஹோ, கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், ராஜஸ்தானின் சட்டம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான அமைச்சர் சாந்தி குமார் தரிவால், உத்தரப்பிரதேச நிதியமைச்சர் சுரேஷ்குமார் கன்னா, மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா ஆகியோர் உள்ளனர்.

ஜிஎஸ்டி சீர்திருத்தக் குழு

ஜிஎஸ்டி சீர்திருத்தக் குழுவானது, வரி அலுவலர்களிடம் இருக்கும் தகவல் தொழில்நுட்ப கருவிகள் குறித்து ஆய்வு செய்வது, அமைப்பை வலுப்படுத்தவும், தொழில் செயல்பாடுகளில் மாற்றம் மேற்கொள்ளவும் பரிந்துரை வழங்குவது, வரி ஏய்ப்பு நடைபெறுவதற்கான வழிகளைக் கண்டறிவது, வருவாய் கசிவைத் தடுக்க மாற்றங்களைப் பரிந்துரைப்பது ஆகியன இக்குழுவின் பொறுப்பாகும்.

மேலும், வரி இணக்கத்தை மேம்படுத்தத் தகவல் பகுப்பாய்வை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறிவது, ஒன்றிய மற்றும் மாநில வரி நிர்வாகங்கள் இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்த வழிகளைக் கண்டறிவது ஆகியவையும் இக்குழுவின் பொறுப்புகளாகும்.

ஜிஎஸ்டி சீர்திருத்த குழுவில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி. பழனிவேல் தியாகராஜன், டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, ஹரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதலா, ஆந்திர பிரதேச நிதியமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத், அசாம் நிதியமைச்சர் அஜந்தா நியோக், சத்தீஸ்கர் வணிக வரித் துறை அமைச்சர் டி.எஸ்.சிங் டியோ, ஒடிசா நிதியமைச்சர் நிரஞ்சன் புஜாரி ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 11 வகையான மருந்துகளின் மீதான வரிச் சலுகை நீட்டிப்பா?

Last Updated :Sep 28, 2021, 12:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.