சான் பிரான்சிஸ்கோ: 2022ஆம் ஆண்டுக்குள் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மைக்ரோ சிப் பற்றாக்குறை சரிசெய்யப்படும் என டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நவீனகால வாகன உற்பத்தியில் மைக்ரோசிப்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
கரோனா பெருந்தொற்று முடக்கம் காரணமாக உதிரி பாகங்கள் உற்பத்தி, விநியோகம் தடைபட்டுள்ளது. இதன் விளைவாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உதிரி பாகங்களின்றி உற்பத்தி துரிதப்படுத்த முடியமல் திணறி வருகின்றன. இதனிடையே, மைக்ரோ சிப் பற்றாக்குறை தீர சில ஆண்டுகளாகும் என்று இண்டெல் நிறுவன தலைவர் பேட் கெல்சிங்கர் தெரிவித்திருந்தார்.
ஆனால், எலான் மஸ்க், வரும் 2022ஆம் ஆண்டிற்குள் இந்த நிலை சரிசெய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "உற்பத்தி தேக்கம் ஒருபுறம் இருந்தாலும், மைக்ரோ சிப் தயாரிப்பு நிறுவனங்கள் புதிதாக உருவாகும் பட்சத்தில், சந்தைகளுக்கு அதன் வரத்து அதிகரிக்கும். எனவே, அடுத்த ஆண்டிற்குள் நிலைமை சீராகும்" எனத் தெரிவித்தார்.
எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக திகழும் டெஸ்லா, மிக விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மைக்ரோ சிப் உருவாக்கும் மிகப்பெரும் ஆலையை திறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஓய்வு வரை ஸ்பேஸ் எக்ஸ் மீது வழக்கு தொடுப்பார் - ட்விட்டரில் எலான் மஸ்க் தாக்கு