நம் நாட்டில் விமான சேவையை பயன்படுத்தும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்திவந்த விமான சேவையை தற்போது அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதற்கு முக்கியக் காரணம் பெருகிவரும் தனியார் விமான நிறுவனங்களும், அவர்கள் தரும் சலுகைகளுமே என்று கூறலாம்.
இந்நிலையில், நம் நாட்டில் 50 விழுக்காடு வரையிலான விமான சேவைகளை அளித்துவரும் தனியார் விமான சேவை நிறுவனமான இண்டிகோ தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 11 (இன்று) முதல் ஜூன் 14ஆம் தேதி வரை இந்தச் சலுகையை பயன்படுத்தி விமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த ஜூன் 16 தொடங்கி செப்டம்பர் 28 வரையிலான நாட்களில் இந்த பயணச்சீட்டுகளின் மூலம் பயணம் செய்து கொள்ள முடியும். குறைந்தபட்சமாக உள்ளூர் சேவைகளுக்கு ரூ. 999, வெளிநாடு சேவைகளுக்கு ரூ. 3,499 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இண்டிகோ நிறுவனத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வரவேற்பு தற்போது வரை மக்களிடம் நீடித்து வருவதால் மக்களுக்கு இந்த கோடைக்கால சலுகையை கூடுதலாக நான்கு நாட்களுக்கு அளிப்பதாக இண்டிகோ நிறுவனத்தின் தலைமை வணிக அலுவலரான வில்லியம் போல்டர் தெரிவித்துள்ளார். மேலும், இது கடைசி நேரத்தில் பயணத்தை முடிவு செய்யும் பலருக்கும் இது உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.