வேலைக்காக மஸ்கட் சென்ற பஞ்சாப் பெண்மணிக்கு நேர்ந்த கொடுமை...!

author img

By

Published : May 21, 2023, 4:22 PM IST

women

வேலைக்காக மஸ்கட் சென்ற பஞ்சாப் பெண்மணி, பிணைக்கைதியாக அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் மீட்கப்பட்டுள்ளார். மஸ்கட்டில் பிணைக்கைதியாக உள்ள சிறுமிகளை அரசு மீட்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பெண்மணி கோரிக்கை விடுத்துள்ளார்.

கபுர்த்தலா: பஞ்சாப் மாநிலம், கபுர்த்தலா மாவட்டத்தைச் சேர்ந்த பர்மிந்தர் என்ற பெண்மணி, தனது வீட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த மார்ச் மாதம் வேலைக்காக ஓமனில் உள்ள மஸ்கட்டிற்கு சென்றுள்ளார். ஒரு முகவர் மூலமாக மஸ்கட் சென்ற நிலையில், அங்கு போனதும் அந்த முகவர் பர்மிந்தரை விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டுள்ளார். அங்கிருந்தவர்கள், அவரது பாஸ்போர்ட், செல்போனை பறித்துக் கொண்டு, ஒரு அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தியுள்ளனர்.

உணவு கூட கொடுக்காமல் வேலை செய்யச் சொல்லியும், பல்வேறு தவறான செயல்களை செய்யவும் அவர்கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக அவர் பிணைக் கைதியாக அடைத்து வைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டார். இது தொடர்பாக பர்மிந்தரின் கணவருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து, அவர் போராடி மனைவியை மீட்டுள்ளார். பர்மிந்தர் நேற்று(மே.20) மாலை தனது வீட்டிற்கு வந்தார்.

தான் மஸ்கட் சென்றது குறித்தும், அங்கு பிணைக்கைதியாக கொடுமைகளை அனுபவித்தது குறித்தும் பர்மிந்தர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில், " குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக எனது அத்தைகளுக்கு தெரிந்த ஏஜென்ட் மூலமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு மஸ்கட் சென்றேன். இங்கு நான் மருத்துவமனையில் சுத்தம் செய்வதைப் போலவே, மஸ்கட்டில் உள்ள மருத்துவமனையில் உள்ளேயும், வெளியேயும் சுத்தம் செய்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால், நான் அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது, அங்குள்ள ஏஜென்ட் சட்ட விரோதமாக வேலை செய்து வருகிறார்.

நான் மஸ்கட்டை அடைந்ததும், ஒரு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு எனது பாஸ்போர்ட், செல்போனை பிடுங்கிக் கொண்டனர். அங்குள்ள அறை ஒன்றில் பல நாட்களாக என்னை அடைத்து வைத்திருந்தனர், உணவு கூட கொடுக்கவில்லை. இதனால் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அங்கு அவர்கள் கூறும் அனைத்து வேலைகளையும் செய்யாவிட்டால், தவறான வேலைகளில் ஈடுபடுத்திவிடுவோம் என்று மிரட்டி வேலை செய்ய வைத்தனர். அடித்தும் சித்தரவதை செய்தனர். என்னைத் தவிர அமிர்தசரஸ் மற்றும் ஜலந்தரைச் சேர்ந்த மேலும் பல சிறுமிகள் அங்கு சிக்கியுள்ளனர். அந்த சிறுமிகளும் மீட்கப்பட வேண்டும். அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இது தொடர்பாக பர்மிந்தரின் கணவர் கூறும்போது, "தகவல் தெரிந்ததும், எனது மனைவியை அழைத்து வர வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டேன். பிறகு ஒரு ஏஜென்ட் மூலமாக மனைவியை மீட்க முடிந்தது. ஆனாலும், இதற்காக அந்த ஏஜென்ட் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் வாங்கினார். இந்த முகவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், மஸ்கட்டில் சிக்கியுள்ள மற்ற சிறுமிகளையும் அரசு மீட்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: என்னது கரன்ட் பில் 8 கோடியா! - புபனேஸ்வரில் தான் இந்த கூத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.