காவல் ஆணையரின் காரை சேதப்படுத்திய நடிகை.. காதலனுடன் சேர்ந்து அட்டூழியம்!
Published: May 23, 2023, 5:28 PM


காவல் ஆணையரின் காரை சேதப்படுத்திய நடிகை.. காதலனுடன் சேர்ந்து அட்டூழியம்!
Published: May 23, 2023, 5:28 PM
போக்குவரத்து காவல் ஆணையரின் காரை எட்டி உதைத்த விவகாரத்தில் நடிகை டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது காதலன் டேவிட் ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாராணை நடத்தி வருகின்றனர்.
ஹைதராபாத்: பிரபல டோலிவுட் நடிகையான 'டிம்பிள் ஹயாதி' மீது ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ‘டிம்பிள் ஹயாதி’.
இவர், ஹைதராபாத் போக்குவரத்து காவல் ஆணையர் ராகுல் ஹெக்டே என்பவரது கார் மீது நடிகை டிம்பிள் ஹயாதி தனது காரை வைத்து மோதியதாக எழுந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து காவல் ஆணையரின் கார் ஓட்டுநர் கொடுத்தப் புகாரின் பேரில், ஜூப்ளி ஹில்ஸ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நடிகை மீதும் அவரது காதலன் டேவிட் என்பவர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போக்குவரத்து காவல் ஆணையர் ராகுல் ஹெக்டே ஹைதராபாத்தில் உள்ள ஜர்னலிஸ்ட் காலனியின் ஹுடா என்கிளேவில் வசிக்கிறார். அதே அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை டிம்பிள் ஹயாதியும் அவரது காதலன் டேவிட் ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர்.
போக்குவரத்து காவல் ஆணையருக்குச் சொந்தமான அரசு வாகனத்தை ஓட்டி வரும் கான்ஸ்டபிள் சேத்தன் குமார், அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் ஆணையரின் வாகனத்தை நிறுத்துகிறார். நடிகை டிம்பிள் ஹயாதி அவரது வாகனத்திற்கு அருகில் காரை நிறுத்தியுள்ளனர்.
வாகனம் நிறுத்துவதில் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வாகனம் நிறுவத்தில் ஏற்பட்ட தகராறில் நடிகை டிம்பிள் ஹயாதியும் டேவிட்டும் சேர்ந்து காவல் ஆணையரின் காரை எட்டி உதைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
அதேபோல், கடந்த 14 ஆம் தேதி டிம்பிள் ஹயாதி, காவல் ஆணையரின் வாகனத்தை தனது வாகனத்தை வைத்து மோதியுள்ளார். இதில், நிறுத்தப்பட்டிருந்த காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்தச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் ஆணையரின் வாகன ஓட்டுநர் சேத்தன் குமார், ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓட ஓட வெட்டி படுகொலை.. செங்கல்பட்டு அருகே நடந்த பயங்கரம்!
