டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள சீர்கோட் வனப்பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சுற்றித் திரிந்தார். இதுதொடர்பாக சமூக ஆர்வலர் அகில் ஜோஷி, பைஜ்நாத் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அந்த இளைஞரை மீட்டு, கருடா நகருக்கு கொண்டு சென்று, அங்குள்ள சத்திரம் ஒன்றில் சேர்ந்தனர். அங்கு அந்த இளைஞருக்கு உணவு, உடை, தங்குமிடம் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய சமூக ஆர்வலர் அகில் ஜோஷி, "அந்த இளைஞர் தமிழ் பேசுகிறார். மனநலம் பாதிக்கப்பட்டவராக தெரிகிறார். அவருக்கு இந்தி தெரியாததால், எங்களிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது சைகைகளை வைத்து அவருக்கு என்ன வேண்டும் என்று அறிந்தோம். இப்போது அவருக்கு அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டன.
அவர் நலமாக இருக்கிறார். அவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்று கூறினார். இந்த இளைஞர் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற கேதர்நாத் பெருவெள்ளத்தில் சிக்கி, தனது குடும்பத்தை இழந்தவராக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் இதுபோன்ற நிறைய சம்பவங்கள் அங்கு நடந்துள்ளன. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கேதர்நாத் வெள்ளத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்து கருடா பகுதியில் சுற்றித்திரிந்தபோது, சமூக ஆர்வலர்கள் சிலர் அவரை மீட்டு, குடும்பத்திடம் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சரத் பவார் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட பிரபல நடிகை கைது