சுருக்குமடி வலை பயன்படுத்த அனுமதி; உச்சநீதிமன்ற விதித்த நிபந்தனை என்ன?

author img

By

Published : Jan 24, 2023, 3:06 PM IST

கோப்புப்படம்

வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: சுருக்குமடி வலையில் மீன் குஞ்சுகள், பவளப்பாறைகள் சிக்கிக் கொள்வதால் அந்த வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கடந்த 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தடை விதித்து அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு கடந்த 2014-ஆம் ஆண்டு 5 கிலோ மீட்டர் தூரத்திற்குள் மட்டும் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என்று பரிந்துரைத்தது.

அந்த பரிந்துரையை ஏற்க வலியுறுத்தி மீனவர் நலச்சங்கம் சார்பில் செனை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுருக்குமடி வலைகள் சுற்றுச்சூழலுக்கும் மீன்பிடி தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி தள்ளுபடி செய்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஞானசேகரம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் சுருக்குமடி வலைக்குத் தடை விதித்துள்ளது சட்டவிரோதமானது என தெரிவித்திருந்தார். கடலில் 12 நாட்டிக்கல் மைல்கள் தாண்டி மீன்பிடிக்க அனுமதி உள்ளது. அவ்வாறு சென்று மீன்பிடித்தாலும் அவர்கள் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதாகவும் வலைகள் பறிமுதல் செய்யப்படுவதாகும், அபராதங்கள் விதிக்கப்படுவதாகவும் இதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது என்பதால் சுருக்குமடி வலை தடையை நீக்கக்கோரி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "சுருக்குமடி வலை என்பது ஒரு ஹெக்டேர் அளவு கொண்டது. இதை அனுமதித்தால் அபூர்வ வகை கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கூடாது. சுருக்குமடி வலையை அனுமதித்தால் ஏனைய மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதி இருந்தும், அவரது கருத்தை கேட்காமலும், ஒப்புதல் இல்லாமலும் நிபுணர் குழு அதன் அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ளது" என வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், "12 கடல் மைலுக்கு அப்பால் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம். திங்கட்கிழமை, வியாழக்கிழமை என வாரத்தில் 2 நாட்கள் மட்டும் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதி. படகுகளை கண்காணிக்க டிராக்கிங் கருவியை பொருத்த வேண்டும். மீன்வளத் துறையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும். படகுகளை கண்காணிக்க டிராக்கிங் கருவி பொருத்த வேண்டும்" என்ற கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: மருத்துவக் காப்பீட்டில் காத்திருப்பு காலம் என்றால் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.