ஆன்லைனில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை!

author img

By

Published : Jul 4, 2022, 3:42 PM IST

suicide

ஆன்லைனில் பணம் ஈட்டும் முயற்சியில் ஒரு லட்சம் ரூபாயை இழந்த இளம்பெண் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நாவலுருவை சேர்ந்த ஜஸ்தி ஸ்வேதா சவுத்ரி(22) என்பவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த மூன்று மாதங்களாக அவர் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2ஆம் தேதி அதிகாலையில் தனது பெற்றோருடன் ஹைதராபாத் புறப்பட இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், ஸ்வேதா அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். பின்னர் 8 மணியளவில் தனது தாயாருக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தான் சில்லகல்லு குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் சில்லகல்லு போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் 10 மணியளவில், ஸ்வேதாவை சடலமாக மீட்டனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆன்லைனில் பணம் ஈட்டும் முயற்சியில் ஸ்வேதா சுமார் ஒரு லட்சம் ரூபாயை இழந்ததாக தெரியவந்துள்ளது. ஆன்லைன் ஆப் மூலம் அறிமுகமான நபர் ஒருவர் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை செலுத்தினால், ஏழு லட்சம் ரூபாய் கிடைக்கும் என கூறியுள்ளார்.

இதை நம்பி ஸ்வேதா ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். பின்னர் ஸ்வேதா தொடர்பு கொள்ள முயன்றபோது, தொலைபேசியை எடுக்கவில்லை என தெரிகிறது. இரண்டு நாட்களாக அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாததால், மன உளைச்சலில் இருந்த ஸ்வேதா தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: ஓபிஎஸ்க்கு ஆதரவான தீர்ப்பு என்னவாகும்? - வரும் ஆறாம் தேதி விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.