நாங்கள் நம்பியவர்கள் நெருக்கடியான சூழலில் உதவவில்லை - பிரதமர் மோடி வேதனை!

author img

By

Published : May 22, 2023, 2:07 PM IST

பிரதமர் மோடி

நாங்கள் நம்பியவர்கள் நெருக்கடியான சூழலில் இருக்கும் போது எங்களுக்கு உதவி செய்யவில்லை என பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

டெல்லி: ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் கடந்த 19ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து இந்தியா - பசிபிக் தீவுகளின் ஒருங்கிணைந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று (மே 21) பப்புவா நியூ கினியாவுக்கு சென்றடைந்தார். அந்நாட்டுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமரான பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று வரவேற்றார் அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராப்பே. மேலும் மோடியின் காலில் விழுந்து அவர் ஆசி பெற்றார்.

இதைத் தொடர்ந்து, பப்புவா நியூ கினியாவின் போர்ட் மோர்ஸ்பி நகரில் இந்தியா - பசிபிக் தீவுகள் ஒருங்கிணைந்த மாநாடு நடைபெற்றது. இதில் 14 பசிபிக் தீவு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், "இன்றைய காலகட்டத்தில் நமது விநியோக சங்கிலி கடுமையான இடையூறை சந்தித்து வருகிறது. எரிபொருள், உணவு, உரம், மருந்துப் பொருட்கள் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. நாம் மிகவும் நம்பியவர்கள், நெருக்கடியான சூழலில் நமக்கு தேவைப்படும் நிலையில் உடன் நிற்கவில்லை.

Highest award to Prime Minister Modi
பிரதமர் மோடிக்கு உயரிய விருது

கொரோனா தொற்றால் உலகளாவிய தெற்கு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பருவநிலை மாற்றம், இயற்கை பேரழிவுகள், வறுமை, சுகாதாரம் தொடர்பான சவால்கள் ஏற்கனவே இருந்தன. தற்போது புதிய பிரச்னைகள் உருவெடுக்க தொடங்கியுள்ளன. நெருக்கடியான நேரங்களில் இந்தியா பசிபிக் தீவு நட்பு நாடுகளுக்கு ஆதரவாக இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" என கூறினார்.

தொடர்ந்து பேசிய பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப்பே, "உலகளாவிய பிரச்னைகளால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். பிரதமர் மோடி தெற்கு நாடுகளின் தலைவர். உலகளாவிய மன்றங்களில் அவரது பின்னால் அணி திரள்வோம்" என்றார்.

இதைத் தொடர்ந்து, பசிபிக் தீவு நாடுகளின் வளர்ச்சிக்கான சில அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார். ஃபிஜி தீவுகளில் 100 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பது, பப்புவா நியூ கினியாவில் பிராந்திய ஐடி மற்றும் சைபர் பாதுகாப்பு பயிற்சி மையம் அமைத்தல் உள்ளிட்ட 12 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பப்புவா நியூ கினியாவின் பிரதமர் ஜேம்ஸ் ஆகியோர் இரு நாடுகளின் நட்புறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இரு நாடுகள் இடையேயான வர்த்தகம், தொழில்நுட்பம், மருத்துவ வசதிகள் குறித்து விவாதித்தனர். இதைத் தொடர்ந்து பசிபிக் நாடுகளின் ஒற்றுமைக்கு காரணமாக இருப்பதை கவுரவித்து, "Companion of the Order of Logohu" என்ற உயரிய விருது பிரதமர் மோடி வழங்கப்பட்டது. இவ்விருதை அந்நாட்டின் கவர்னர் ஜெனரல் சர் பாப் தாடே வழங்கினார்.

மாநாட்டின் ஒருபகுதியாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : தோக் பிசின் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு... பிரதமர் மோடி வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.