இந்தியாவில் அதிகரிக்கும் கரோனா: மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம்!

author img

By

Published : Jun 23, 2022, 10:38 PM IST

மன்சுக் மாண்டவியா

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று உயர் அலுவலர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

டெல்லி: இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு 1000-க்கும் மேல் பதிவாகி வருகிறது.

இந்தநிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், தடுப்பூசி திட்டம் குறித்தும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உயர் அலுவலர்களுடன் இன்று (ஜூன் 23) ஆலோசனை மேற்கொண்டார். அப்போது,"வயதானவர்கள், தகுதிவாய்ந்த நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கரோனா தொற்று அதிகம் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். கரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் நிதி ஆயோக் சுகாதாரப் பிரிவு உறுப்பினர் டாக்டர் விகே பால், எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா, ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா, கோவிட் பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா, நோய்த்தடுப்பு தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, என்சிடிசி இயக்குநர் சுஜீத் சிங், ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனிடையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 13 ஆயிரத்து 313 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் மெல்ல அதிகரிக்கும் கரோனா: புதிதாக 13ஆயிரம் பேருக்கு பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.