கலமச்சேரி பேருந்து எரிப்பு வழக்கு - இருவருக்கு 7 ஆண்டுகள், ஒருவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை!

author img

By

Published : Aug 1, 2022, 4:49 PM IST

Kalamassery

கலமச்சேரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நசீர், சபீர் புஹாரி ஆகிய இருவருக்கு 7 ஆண்டுகளும், தாஜூதீனுக்கு 6 ஆண்டுகளும் கடுங்காவல் சிறை விதித்து தேசிய புலனாய்வு முகமை(NIA) சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எர்ணாகுளம்: கேரளாவில் கடந்த 2005ஆம் ஆண்டு எர்ணாகுளத்தில் இருந்து சேலத்திற்குச்சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசுப்பேருந்து கடத்தப்பட்டு, கலமச்சேரி என்ற இடத்தில் தீயிட்டு எரிக்கப்பட்டது.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள அப்துல் நாசர் மதானியை விடுவிக்கக்கோரியே இந்தச்சம்பவம் நடந்தது. இந்தச்சம்பவம் தொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் கடந்த 2010ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை(NIA) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட நசீர், சபீர் புஹாரி, தாஜுதீன் ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் என கடந்த 28ஆம் தேதி, எர்ணாகுளம் என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர்கள் மூவரும் பொது அமைதியை சீர்குலைக்க சதி செய்தது உறுதி செய்யப்பட்டதாகத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று மூவருக்கும் தண்டனைகள் அறிவிக்கப்பட்டன. நசீர், சபீர் புஹாரி ஆகிய இருவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், தாஜுதீனுக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நசீரும், சபீர் புஹாரியும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், தாஜுதீன் ஒரு லட்சத்து பன்னிரெண்டாயிரத்து 500 ரூபாயும் அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க:கொலை மிரட்டல்: சல்மான்கானுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.