ஆவணப்படம் தொடர்பான அவதூறு வழக்கு - பிபிசி நிறுவனத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் சம்மன்!

author img

By

Published : May 22, 2023, 9:11 PM IST

Delhi

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் தொடர்பான அவதூறு வழக்கில், பிபிசி இங்கிலாந்து மற்றும் பிசிசி இந்தியா நிறுவனம் பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: 2002 குஜராத் கலவரம் மற்றும் பிரதமர் மோடி தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் "India: The Modi Question" என்ற இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை உருவாக்கியிருந்தது. இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி வெளியானது. இப்படத்தில், 2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை குறித்து விவரிக்கப்பட்டிருந்தது. வீடியோ உள்ளிட்டப் பல்வேறு ஆதாரங்களுடன் இந்த ஆவணப்படம் விளக்கப்பட்டிருந்தது.

இந்தப் படம் வெளியானதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாக பிரசாரம் செய்யும் வகையில் இந்த படம் இருப்பதாக பாஜக மற்றும் வலதுசாரி அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதேநேரம், இந்த ஆவணப்படத்தில் நடந்த உண்மைகள் ஆதாரங்களுடன் கூறப்பட்டுள்ளதே தவிர புதிதாக ஒன்றுமில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்தது. இது தொடர்பான உள்ளடக்கங்கள் சமூக வலைதளங்களில் இருந்தும் அகற்றப்பட்டன. ஆனால், தடையை மீறி பல்வேறு அரசியல் கட்சிகள் இப்படத்தை பொதுவெளியில் திரையிட்ட சம்பவங்களும் நடந்தன.

இந்த ஆவணப்படம் வெளியாகிய சில நாட்களிலேயே டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பிபிசி தொலைக்காட்சி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன.

இதனிடையே குஜராத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. அதில், இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கில் இந்த ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருப்பதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று(மே.22) டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பிபிசி இங்கிலாந்து நிறுவனம் இந்த ஆவணப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது. பிபிசி இந்தியா நிறுவனம் அதன் கிளை மட்டுமே. இந்த ஆவணப்படம் இந்தியாவின் நற்பெயருக்கும், இந்திய நீதித்துறையின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் அவதூறு பரப்பும் வகையில் உள்ளது" என வாதிட்டார்.

இதையடுத்து, வழக்குத் தொடர்பாக பிபிசி நிறுவனம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக பிபிசி இங்கிலாந்து அலுவலகம் மற்றும் பிபிசி இந்தியா அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

முன்னதாக கடந்த மாதம், பிபிசி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. பிபிசி நிறுவனம் வெளிநாட்டில் நிதி பெற்றதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இதையும் படிங்க: பிபிசி ஆவணப்படம் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.