உலகின் முதல் மூக்கு வழி கரோனா தடுப்பு மருந்து - இந்தியாவில் அறிமுகம்.!

author img

By

Published : Jan 26, 2023, 7:31 PM IST

மூக்கு வழி கரோனா தடுப்பு மருந்து

கரோனவுக்கு மூக்கு வழியாக செலுத்தப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இன்கோவேக் தடுப்பு மருந்தை மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, ஜிதேந்தரா சிங் ஆகியோர் அறிமுகம் செய்தனர்.

டெல்லி: நாட்டில் கரோனாவுக்கு கோவேக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி படைத்தவர்கள் என மத்திய சுகாதாரத்துறை அடையாளப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மூக்கு வழியாக கரோனாவுக்கு செலுத்தப்படும் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி உள்ளது. உலகிலேயே முதல் முறையாக நாசி வழியாக செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்து இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கட்ட மருத்துவ பரிசோதனைகள் வெற்றி பெற்றதாக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாரத் பயோடேக் மருந்து நிறுவனம் தயாரித்த மூக்கு வழி கரோனா தடுப்பு மருந்துக்கு இன்கோவேக் என பெயரிடப்பட்டுள்ளது. இன்கோவேக் தடுப்பு மருந்துக்கு கடந்த டிசம்பர் 23ஆம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், இன்கோவேக் தடுப்பு மருந்து அறிமுக நிகழ்வு டெல்லியில் நடைபெற்றது.

நிகழ்வில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இன்கோவேக் கரோனா தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தினர். மத்திய அரசு நிதியுதவியின் மூலம் இன்கோவேக் தடுப்பு மருந்தின் தயாரிப்பு மேம்பாடு மற்றும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இன்கோவேக் தடுப்பூசி முதன்மை தொடராகவும், பன்முகத்தன்மை பூஸ்டர் டோசாக நிர்வகிக்க மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாடு அமைப்பு அனுமதித்துள்ளதாக பாரத் பயோடக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் புதிய பரவல் மற்றும் திரிபு மாற்று வைரஸ்களுக்கு எதிராக இன்கோவேக் தடுப்பூசி சீரிய முறையில் செயலாற்றும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவின் தளத்தில் இன்கோவேக் தடுப்பூசி கிடைப்பதாகவும், தனியார் சந்தையில் 800 ரூபாய் வரை தடுப்பு மருந்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு தடுப்பு மருந்து 325 ரூபாய் விலையில் வழங்கப்படும் என பயோடக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் மூக்கு வழியாக கரோனாவுக்கு தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் ஊசியில்லா மருந்தை மூன்றாவது அல்லது முன்னெச்சரிக்கை டோசாக தேர்வு செய்யும் வசதி உருவாகி உள்ளதாகவும் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூக்கு வழியாக மருந்து செலுத்திக் கொள்ளும் தடுப்பு மருந்து, குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஏற்ப செலவு குறைந்ததாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்தை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் தட்பவெட்பத்தில் கையாள முடியும் என்பதால், சேமிப்பு மற்றும் விநியோகத்தை எளிதாக நிர்வகிக்க முடியும் என மருந்து நிறுவனம் கூறியுள்ளது.

இதையும் படிங்க: "திமுக விரைவில் குப்பை மேட்டிற்கு வரும்" - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.