மக்களவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து களமிறங்கியுள்ளன. புலந்த்சஹாரில் இக்கூட்டணி சார்பில் யோகேஷ் சர்மா என்ற வேட்பாளர் போட்டியிட்டார்.
இந்நிலையில்,அப்துலாபூர் ஹுலஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பவன் குமார் (25). இவர் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி சார்பில் களமிறங்கிய யோகேஷ் சர்மாவுக்கு வாக்களிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கும்போது, தவறுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக வேட்பாளர் போலா சிங்குக்கு வாக்களித்துவிட்டார். இதனால், மிகுந்த மனவேதனைக்குள்ளாகிய பவன்குமார். விரக்தியில் தனது ஆள்காட்டி விரலை தானே துண்டித்துக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து பவன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் தவறுதலாக வாக்களித்ததற்கு வருத்தம் தெரிவித்து வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார்.