உத்ரா கொலை வழக்கு: பாம்பின் டி.என்.ஏ.வை பரிசோதிக்க முடிவு!

author img

By

Published : May 27, 2020, 10:58 AM IST

பாம்பின் டி.என்.ஏ பரிசோதனை செய்ய முடிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் பாம்பைப் பயன்படுத்தி மனைவியைக் கொலைசெய்த வழக்கில் கிடைத்துள்ள நாகப்பாம்பின் டி.என்.ஏ.வை பரிசோதனை செய்ய காவல் துறையினர் முடிவுசெய்துள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர் சூரஜ். இவருடைய மனைவி உத்ரா. சூரஜுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பதை அறிந்த உத்ரா அவரைக் கண்டித்துள்ளார்.

இதனால், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், உத்ராவை கொலைசெய்வதற்காக சுரேஷ் என்பவரிடம் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து நச்சுப்பாம்பை வாங்கினார் சூரஜ்.

மே 7ஆம் தேதி இரவு 2.30 மணியளவில் உத்ரா தூங்கிக்கொண்டிருந்தபோது அப்பாம்பை எடுத்து அவரது காலடியில் போட்டு கடிக்கச்செய்தார். இதையடுத்து உத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். பின்னர், உத்ரா அவரது தாயார் வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவம் பெற்றுவந்தார்.

தனது முதல் திட்டம் தோல்வியடைந்ததையடுத்து சூரஜ் மீண்டும் சுரேஷிடம் வேறொரு நச்சுப்பாம்பை வாங்கி, தனது மாமியார் வீட்டிற்குச் சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த உத்ராவை கடிக்கச் செய்து கொலைசெய்தார்.

இதில் சந்தேகமடைந்த உத்ராவின் பெற்றோர் சூரஜ் மீது காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, கொலையில் தொடர்புடைய சூரஜ், சுரேஷ் உள்ளிட்ட மூன்று பேரைக் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (மே 26) உத்ராவின் தாயார் வீட்டை காவல் துறையினர், வனத் துறையினர், கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்டோர் ஆய்வுசெய்தனர். அந்த ஆய்வில் நாகப்பாம்பு ஒன்றை அடித்துக்கொன்று, புதைத்துவைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் இந்தப் பாம்பை பயன்படுத்திதான் உத்ராவை கொலைசெய்தார்களா என்பதையறிய அதன் பற்கள், மூளை, எலும்புகள் உள்ளிட்டவற்றைச் சேகரித்தனர்.

மேலும், பாம்பின் டி.என்.ஏ.வை பரிசோதனை செய்ய முடிவுசெய்தனர். அதற்கேற்ற ஆய்வகங்கள் அங்கு இல்லாததால் சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு அனுப்பிவைத்து பரிசோதனை செய்ய முடிவுசெய்துள்ளனர்.

உத்ராவை கடித்தது அந்தப் பாம்புதானா என்பதைக் கண்டறிய இந்தப் பரிசோதனைகள் நடத்தப்படுவதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்ராவின் வீட்டில் ஆய்வுசெய்த காவல் துறையினர்

மேலும், இது குறித்து பல தகவல்கள் வெளிவரும் என்றும் இந்தக் கொலை தொடர்பாக இன்னும் சிலர் பிடிபடுவார்கள் என்றும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: பாம்பை வைத்து மனைவியைக் கொன்றவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.