ஒடிசாவில் ஏப்ரல் 11, 18 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்தல் பணியில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி இதுவரை 14 தேர்தல் அலுவலர்களை இடைநீக்கம் செய்துள்ளார் அம்மாநில தேர்தல் அலுவலர் சுரேந்திர குமார். ஒரு தொகுதிக்கு மறுதேர்தல் நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து சுரேந்திர குமார் கூறுகையில், '14 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியின்போது அலட்சியமாக செயல்பட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது, சொரதா தொகுதியில் பாஜக வேட்பாளர் ஒருவர் வாக்கு எந்திரத்தை உடைத்துள்ளார்.
அந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்தத் தொகுதிக்கு மட்டும் மற்றொரு நாளில் மறுத்தேர்தல் நடைபெறும்' எனத் தெரிவித்தார்.