பிபிசி சர்ச்சை ஆவணப்படம் ஒளிபரப்பு - எஸ்.எப்.ஐ மாணவர்கள் கைது.. போராட்டம்..

author img

By

Published : Jan 25, 2023, 7:48 PM IST

பிபிசி சர்ச்சை ஆவணப் படம்

பிரதமர் மோடி குறித்த பிபிசியின் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் திரையிட தடை விதித்து, இந்தியா மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்ததாக, மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி: குஜராத்தில் 2002ஆம் ஆண்டு வெடித்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். மேலும் 2ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில் இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனம் பிபிசி, ’இந்தியா - மோடியின் கேள்விகள்’ என்ற தலைப்பில் இரு தொகுப்புகளாக ஆவணப் படத்தை தயாரித்தது.

இதில் முகற்பாகம் கடந்த 17ஆம் தேதி வெளியானது. முதல் பாகத்தில் பிரதமர் மோடிக்கும், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சமூகத்திற்கும் இடையிலான பிரச்னை, 2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை குறித்து விவரிக்கப்பட்டிருந்தது.

இந்த தொடர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக, பிரிட்டன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ராமி ரேஞ்சர் கண்டனம் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பிபிசியின் ஆவணப்படத்திற்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்புக் கிளம்பியது. மத்திய அரசு அதிகாரிகள், வெளியுறவுத்துறை அதிகாரிகள், தூதர்கள் உள்ளிட்டோர் பிபிசி நிறுவனத்தின் ஆவணப்படத்திற்கு எதிர் கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், தனக்கு உரிய திருத்தப்பட்ட விதிகள் மற்றும் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தி ட்விட்டர் மற்றும் யூடியூப் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி தொடர்பான வீடியோக்களை முடக்கியது. இந்நிலையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மோடி குறித்த ஆவணப்படம் திரையிட திட்டமிடப்பட்டது.

கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பை மீறி, மாணவ அமைப்பினர் ஆவணப்படத்தை திரையிட்ட நிலையில், குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மாணவர்கள் கூட்டத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இரு தரப்பு இளைஞர்களும் தங்களுக்குள் தாக்கிக் கொண்ட நிலையில், மாணவர்கள் சிலர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக மாணவ கூட்டமைப்பினர், டெல்லி காவல் நிலையத்தில் போராட்டம் நடத்தினர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷம் எழுப்பினர். போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர். மேலும் சர்ச்சைக்குரிய ஆவணப் படம் திரையிடப்படாமல் இருக்க கல்லூரி சுற்றுவட்டாரப்பகுதியில் மின் தடை மற்றும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்கனவே பதிவிறக்கம் செய்த வீடியோவை இளைஞர்கள், தங்கள் செல்போன் மற்றும் மடிக்கணினி மூலம் கூட்டமாக அமர்ந்து பார்த்தனர். இதனிடையே மற்றொரு மத்திய அரசு கல்வி நிறுவனமான ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப் படத்தை திரையிட உள்ளதாக இந்திய மாணவர் கூட்டமைப்பினர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தினர். மேலும் இன்று (ஜன.25) மாலை 6 மணிக்கு படம் திரையிடுவதாக மாணவர் அமைப்பினர் விளம்பரப்படுத்தினர்.

தொடர்ந்து கல்லூரியில் அசம்பாவிதங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், ஆவணப் படம் திரையிடுவது தொடர்பாக இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதைக் கண்டித்து மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அசம்பாவிதங்களை தவிர்க்க கல்லூரியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ’இந்தியா மோடியின் கேள்விகள்’ தொடரின் 2வது தொகுப்பு வெளியாகி கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பிபிசியின் ஆவணப்படத்தை எதிர்த்த ஏ.கே.ஆண்டனியின் மகன்... வலுத்த எதிர்ப்பால் காங்கிரஸிலிருந்து விலகல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.