மகளின் உண்டியல் பணத்தில்தான் லாட்டரி சீட்டை வாங்கினேன் - லாட்டரியில் ரூ.25 கோடி வென்ற அனூப் பேட்டி...

author img

By

Published : Sep 19, 2022, 8:20 PM IST

auto

மகளின் உண்டியல் பணத்தில்தான் லாட்டரி சீட்டை வாங்கியதாக, ஓணம் பம்பர் லாட்டரியில் 25 கோடி ரூபாயை வென்ற அனூப் தெரிவித்தார்.

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள ஸ்ரீவராஹம் பகுதியைச்சேர்ந்த அனூப் என்பவருக்கு, ஓணம் பம்பர் லாட்டரியில் 25 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. மலேசியாவுக்குச் சமையல்காரராகப் பணிக்கு செல்ல திட்டமிட்டிருந்த இவருக்கு, லாட்டரி அடித்ததால் வெளிநாடு செல்லும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டார்.

தனது மகளின் உண்டியல் சேமிப்பை வைத்தே அந்த லாட்டரி சீட்டை வாங்கியதாக அனூப் தெரிவித்தார்.

இதுகுறித்து அனூப் நெகிழ்ச்சியுடன் கூறுகையில், "கடந்த 22 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறேன். கடந்த காலங்களில் நூறு ரூபாய் முதல் அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் வரை வென்றுள்ளேன். இந்த முறை எனக்கு லாட்டரி அடித்துள்ளது. இதில் சுவாரசியம் என்னவென்றால், நான் முதலில் எடுத்த லாட்டரிச்சீட்டு இது இல்லை. முதலில் எடுத்ததை வேண்டாம் என விட்டுவிட்டு, மற்றொன்றை எடுத்தேன். இரண்டாவதாக எடுத்த சீட்டுக்குத்தான் பரிசு கிடைத்துள்ளது.

நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால், நான் டிவியில் லாட்டரி முடிவுகளைப் பார்க்கவில்லை. பின்னர், எனது தொலைபேசியைப் பார்த்தபோது, ​​​​நான் வெற்றி பெற்றதைக் கண்டேன், என்னால் நம்ப முடியவில்லை.

அதை என் மனைவியிடம் காட்டி உறுதிப்படுத்திக்கொண்டேன். அப்போதும் நம்ப முடியாமல், எனக்கு தெரிந்த லாட்டரிச் சீட்டு விற்கும் ஒரு பெண்ணுக்கு போன் செய்து, அது வெற்றி எண் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். இந்த பணத்தை வைத்து கடன்களை அடைத்துவிட்டு, எனது குடும்பத்திற்காக ஒரு வீடு கட்டுவேன். பிறகு என் உறவினர்கள் சிலருக்கு உதவுவேன். சில தொண்டு வேலைகளைச் செய்ய திட்டமிட்டுள்ளேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க:லாட்டரியில் ரூ. 25 கோடி... வெளிநாட்டு வேலைக்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநருக்கு அடித்த யோகம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.