Arvind Kejriwal: சரத் பவார் - அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு... தேசிய அரசியலில் ஏற்பட உள்ள திருப்பம் என்ன?

author img

By

Published : May 25, 2023, 5:44 PM IST

Arvind Kejriwal

டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் ஆதரவு கோரி மகாராஷ்டிர தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை சந்தித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அலோசனை நடத்தினார்.

மும்பை : தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தலைநகர் டெல்லியை ஆம் ஆத்மி அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான பஞ்சாயத்து தொடர் கதையாக நீடித்து வருகிறது. அங்கு குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடை மாற்றுவது குறித்த அதிகாரம் துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசிடமே இருந்தது. இதனால் டெல்லியை அளும் ஆம் ஆத்மி அரசுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே சுமூக உறவு நீடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதை எதிர்த்து கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரிகள் நியமனம் மற்றும் பணி மாற்றம் குறித்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் இந்த அதிகாரத்தில் தலையிடக்கூடாது என்று உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வலியுறுத்தியது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மாநில அரசின் ஆட்சியையோ, நிர்வாகத்தையோ நிர்வகிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது என்றும் அதிகாரிகள் நியமனம், நிர்வாகம் செய்வது, அதிகாரிகளை மாற்றம் செய்வது ஆகியவற்றில் டெல்லி அரசுக்கு தான் முழு அதிகாரம் இருப்பதாக கூறி உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பு டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து டெல்லியில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளை இடமாற்றி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்நிலையில், டெல்லியில் அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்க முதலமைச்சர், தலைமைச் செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் அடங்கிய தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைத்து அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இதற்கு ஆம் ஆத்மி அரசு கடும் அதிருப்தி தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்க்கும் வகையில் மத்திய அரசின் அவசரச் சட்டம் இருப்பதாகவும், இந்த அவசரச் சட்டம் உச்ச நீதிமன்றத்தின் மீது பிரதமர் மோடி தலைமையிலன அரசுக்கு நம்பிக்கை இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாகவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்தார்.

இந்நிலையில், இந்த அவசரச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேசிய அளவிலான எதிர்க் கட்சிகளிடம் ஆதரவு திரட்டும் பணியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டு உள்ளார். அதன் ஒருபகுதியாக அண்மையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜியை சந்தித்து அலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக மகாராஷ்டிரா சென்று உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு முழு ஆதரவு அளிப்பதாக உத்தவ் தாக்ரே ஒப்புக் கொண்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

தொடர்ந்து, இன்று (மே. 25) தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பக்வந்த் மான் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அவசரச் சட்ட விவகாரத்தில் தனது நிலைப்பாட்டு குறித்து சரத்பவார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய சரத் பவார், பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உயிர்ப்பை மீட்க போராட வேண்டிய நேரம் இது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : Punjab CM: பஞ்சாப் முதலமைச்சருக்கு Z-plus பாதுகாப்பு.. மத்திய அரசு வழங்கும் பாதுகாப்புகள் என்னென்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.