குஜராத் தேர்தல்.. மும்மூர்த்திகளால் பாஜகவுக்கே லாபம்.. ஈடிவி பாரத் தேர்தல் அலசல்..

author img

By

Published : Nov 25, 2022, 8:02 PM IST

Updated : Nov 26, 2022, 10:50 AM IST

குஜராத் தேர்தல்.. மும்மூர்த்திகளால் பாஜகவுக்கே லாபம்

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் கட்சிகளால் பாஜகவுக்கே லாபம் என்று ஈடிவி பாரத் செய்தி ஆசிரியர் பிலால் அகமது பட் தெரிவிக்கிறார். குஜராத் தேர்தல் குறித்த சிறப்பு செய்தித்தொகுப்பு.

ஹைதராபாத்: குஜராத் மாநில சட்டப்பேரவை 2 கட்டங்களாக நடக்கிறது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ஆம் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ளதால் மும்முனை போட்டியாளர்களான பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் உச்ச கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. அதே நேரத்தில் குஜராத் மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சிகளும் போட்டியிடுகின்றன. அந்த வகையில், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் பல தொகுதிகளில் களமிறங்கியுள்ளது. இப்படி பாஜகவுக்கு பல கட்சிகள் போட்டியாக வந்துள்ளன. பல்வேறு தேர்தல் வியூகங்களும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் கட்சிகள் பாஜக வாங்குவங்கியில் சரிவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கின்றன.

ஆனால், மும்மூர்த்திகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் கட்சி கூட்டணியாக இணைந்தால் மட்டுமே, பாஜகவை எதிர்கொள்ளவோ, வீழ்த்தவோ முடியும், தனித்தனியாக போட்டியிட்டால் பாஜகவுக்கு எதிரான ஓட்டுகள் மூன்று கட்சிகளுக்கும் பிரிந்துசெல்லுமே தவிர பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறார் ஈடிவி பாரத் செய்தி ஆசிரியர் பிலால் அகமது பட். இதுகுறித்து அவர் எழுதுகையில், குஜராத்தில் சிறுபான்மை வாக்காளர்கள் அதிகமுள்ள 14 தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் போட்டியிடுகிறது. அதில் 12 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஏஐஎம்ஐஎம் கட்சியின் இந்த முடிவு பாஜக அல்லாத மாற்று கட்சிகளுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது. குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளைப் போலல்லாமல், பாஜகவுக்கென தனி வாக்குவங்கி உள்ளது.

இந்த வாக்குவங்கி மாறப்போவதில்லை. மாறாக, பாஜக எதிர்ப்பு வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல் ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் என பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இதனால் வாக்குகள் பிரிந்துவிடுமே தவிர பாஜகவுக்கு எதிராக ஒன்று சேராது. அண்மையில் பிகாரின் கோபால்கஞ்ச் தொகுதியில் நடந்துமுடிந்த இடைத்தேர்தல் இதற்கு ஒரு நல்ல உதாரணம். எதிர்க்கட்சிகளின் வெற்றி வாய்ப்பை ஏஐஎம்ஐஎம் எவ்வாறு பிரித்தது அந்த தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாஜகவுக்கும் தோல்வியடைந்த ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கும் 1,794 வாக்குகள் மட்டுமே வித்தியாசம். அதே தொகுதியில் ஏஐஎம்ஐஎம் போட்டியிட்டு 12,214 வாக்குகளை பெற்றது. இந்த வாக்குகளே ராஷ்ட்ரிய ஜனதா தளம் தோல்வியடைந்ததற்கு காரணம். ஒருவேளை ஏஐஎம்ஐஎம் போட்டியிடவில்லை என்றால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கும்.

இந்த நிலைமையே குஜராத்திலும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கே பாதிப்பை ஏற்படுத்தும். குஜராத்தின் ஜமால்பூர் மற்றும் காடியாவில் 2 முஸ்லிம் வேட்பாளர்களை ஏஐஎம்ஐஎம் களமிறக்கியுள்ளது. இவர்கள் நேரடியாக காங்கிரஸ் ஓட்டுகளை பிரிக்க அதிகவாய்ப்புள்ளது. இது பாஜகவுக்கு பலன் அளிக்கும். வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஏற்கனவே அசாதுதீன் ஓவைசியை பாஜகவின் பி டீம் என்றும், பாஜகவுக்கு சாதகமாகவே வேட்பாளர்களை அவர் நிறுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. இவர் நிறுத்தும் பல வேட்பாளர்கள் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களே என்ற கருத்தும் உள்ளது. இந்த தகவல்கள் வெளியான சில நாள்களில் பாபுநகர் தொகுதி வேட்பாளரை ஓவைசி வாபஸ் பெற்றார். இதன்மூலம் பாஜகவின் பி டீம் அல்ல என்பதையும் சொல்ல முற்பட்டிருக்கிறார். ஆனால், இது தேர்தல் கண்துடைப்பு போல உள்ளது.

ஏனென்றால், அந்த தொகுதியில் காங்கிரஸ் பலமாகவும், ஏஐஎம்ஐஎம் பலவீனமாகவும் உள்ளது. அதே சமயம், பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியான அகமதாபாத்தின் டானிலிம்டாவில் காங்கிரஸின் சிட்டிங் எம்எல்ஏ ஷைலேஷ் பர்மாருக்கு எதிராக இந்து வேட்டபாளரை ஓவைசி களமிறக்கியிருக்கிறார். இதுவும் வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்படி உள்ளது. டானிலிம்டா தொகுதியில் பட்டியலினம் மற்றும் பழங்குடியின வாங்குகளுடன்முஸ்லீம் மக்கள் வாக்குகளும் உள்ளன.

அந்த வகையில் மொத்தமுள்ள 2,39,999 வாக்காளர்களில் 65,760 முஸ்லிம் வாக்காளர்களும் உள்ளனர். அதனடிப்படையில் பார்த்தால் ஓவைசி முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியிருந்தால் வாக்குகள் பெரிதளவில் பிரிந்திருக்காது. இப்போது பிரிய அதிக வாய்ப்புள்ளது. இதையே குஜராத் மாநிலம் முழுவதும் எடுத்துக்கொண்டால், சுமார் 25 தொகுதிகளில் 11% முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதிகளில் பட்டியலினமும் அடங்கும். இந்த தொகுதிகளில் பாஜக வெல்ல முடியாத இடங்களில் ஏஐஎம்ஐஎம் இந்து வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளது. மொத்தமாக பாஜக 182 தொகுதிகளிலும், காங்கிரஸ் 179 தொகுதிகளிலும் மட்டுமே போட்டியிடுகிறது. 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், 11 மாவட்டங்களைக் கொண்ட சௌராஷ்டிரா மண்டலத்தில் 18 இடங்களில் மட்டுமே பாஜக வென்றது. இந்த மண்டலத்தை காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்றே சொல்லலாம். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் இந்த மண்டலத்தில் இருந்து 9 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவுக்கு மாறிவிட்டனர்.

கடந்த தேர்தலில், மாநிலம் முழுவதும் பாஜக 49% வாக்குகளையும், காங்கிரஸ் 41% வாக்குகளையும், மற்றவை 10% வாக்குகளைப் பெற்றுள்ளன. இந்த முறை காங்கிரஸின் வாக்கு விழுக்காடு ஆம் ஆத்மி மற்றும் ஏஐஎம்ஐஎம் இடையே பிளவுபட வாய்ப்புள்ளது. இது பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பையே அளிக்கிறது. பிரதமர் மோடி சௌராஷ்டிரா மண்டலத்தில் தீவிரமாக பரப்புரை மேற்கொள்ளும் வேளையில் காங்கிரஸ் முனைப்பாக அங்கு பரப்புரையில் ஈடுபடவில்லை. காங்கிரஸ் வேட்பாளர்கள் மறைமுகமாக பாஜவுக்கு ஆதரவு அளிப்பதாகவும், வெற்றி பெற்றாலும் பாஜகவுக்கு மாறிவிடும் எண்ணத்தில் இருப்பதாகவும் பரவும் செய்தியே இதற்கு காரணம் என்று தெரிவிக்கிறார்.

இதையும் படிங்க: குஜராத் தேர்தல்: ஆட்சியை தக்கவைக்க பாஜகவின் வியூகங்களும் சவால்களும்

Last Updated :Nov 26, 2022, 10:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.