வடலூர் அருகே இளம்பெண் கொடூர கொலை; சாலை விரிவாக்கத்தின்போது சடலம் கண்டெடுப்பு
கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Published : May 29, 2026 at 8:27 PM IST
கடலூர்: 25 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூர் பேரூராட்சி அடுத்த கண்ணுத்தோப்பு பாலம் அருகே விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை ஒட்டிய மணலை தூர்வாரியபோது மண்ணில் அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
அந்த சடலத்தின் முகம் சிதைக்கப்பட்டு கால்கள் மட்டுமே வெளியே தெரிந்துள்ளது. மேலும், காலில் மெட்டி அணிந்திருந்ததை வைத்து அது பெண் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வடலூர் காவல்துறையினர், தடயவியல் அதிகாரிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இறந்த பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை.
பெண்ணை இங்கு அழைத்து வந்து கொலை செய்தனரா? அல்லது வேறு எங்கேனும் கொலை செய்து உடலை இங்கு புதைத்தனரா? என்பது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதற்கட்டமாக கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 25 வயது இருக்கலாம் என்று கூறப்படுதிறது.

