மதுரை வரும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம்?
பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் கலந்துகொள்ள உள்ளனர்.

Published : February 24, 2026 at 10:10 PM IST
மதுரை: தேர்தல் பரப்புரைக்காக மதுரை வரும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாக உள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான முன்னெடுப்புக்களை வேகமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மார்ச் 1-ஆம் தேதி மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
கூட்டம் நடைபெறும் இடத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் உள்ளிட்ட உயரதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
இதற்கிடையே தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1ஆம் தேதி சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

