ETV Bharat / state

'தாமிரபரணியை மீட்பது மிகவும் எளிதான காரியம்' - இந்தியாவின் 'நீர் மனிதன்' ராஜேந்திர சிங் பேட்டி

மக்கள் நதியைத் தங்கள் ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாகக் கருதினால் மட்டுமே தூய்மைப் பணிகள் முழுமை பெறும் என்று ராஜேந்திர சிங் தெரிவித்தார்.

ராஜேந்திர சிங்
ராஜேந்திர சிங் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 4, 2026 at 9:33 PM IST

2 Min Read
Choose ETV Bharat

திருநெல்வேலி: ராஜஸ்தானில் 23 நதிகளை மீட்ட தனக்கு, தாமிரபரணியை மீட்பது மிகவும் எளிதான காரியம் என்று 'இந்தியாவின் நீர் மனிதன்' ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் வற்றாத ஜீவ நதியாக தாமிரபரணி திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், நதியை தூய்மைப்படுத்துவது மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், நதியை ஆய்வு செய்ய இந்தியாவின் 'நீர் மனிதன்' என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங்கை நியமித்தது. இதற்காக கடந்த நான்கு நாட்களாக நதியின் பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்ட ராஜேந்திர சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அவர் பேசுகையில், ''தாமிரபரணி நதியைத் தூய்மைப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய உயர் நீதிமன்றம் எனக்குப் பொறுப்பு வழங்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக நேரில் சென்று பார்த்த போது, நதி மிகுந்த மாசடைந்து இருப்பதைக் கண்டேன். இது குறித்து தாமிரபரணி மக்கள் மற்றும் ஊடகங்களிடம் நான் கேட்க விரும்புவது என்னவென்றால், நீதிமன்றத்திற்கு நீங்கள் என்ன ஆலோசனைகளை வழங்க விரும்புகிறீர்கள்?

கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 6 முதல் 7 மாவட்ட ஆட்சியர்கள் தாமிரபரணியைச் சுத்தம் செய்யப் பல திட்டங்களை முன்னெடுத்தனர். சுமார் 100 இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொப்பிகள், டி-ஷர்ட்டுகள் வழங்கப்பட்டு விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆனால், அந்தந்த ஆட்சியர்கள் மாற்றப்பட்டதும், பணிகளும் பாதியிலேயே நின்றுவிட்டன. ஒரு நிலையான குழுவோ அல்லது அர்ப்பணிப்புடன் செயல்படும் அதிகாரியோ இல்லாததே இதற்கு முக்கியக் காரணம். நதியைத் தூய்மைப்படுத்தும் பணிகளைத் தற்காலிகமாகச் செய்யாமல், தொடர்ச்சியாகக் கண்காணிக்க ஒரு தனி 'நோடல் அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும். அந்த அதிகாரி நதி முழுவதையும் தூய்மையாக வைத்திருப்பதற்கும், நதி நீர் தடையின்றி ஓடுவதற்கும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

மக்கள்தொகை மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் மாசு அதிகரிக்கிறது. சுத்தமான நதி நீரில் கழிவுநீரைக் கலப்பது மிகப்பெரிய தவறு. சுத்தமான நீர் மற்றும் கழிவுநீர் ஆகியவற்றுக்குத் தனித்தனி அமைப்புகள் (Separate Systems) இருக்க வேண்டும். நதிக்குள் கழிவுநீர் கலப்பதைத் தடுத்தால் மட்டுமே நதியை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியும். நதியின் ஆரோக்கியம் என்பது மனித ஆரோக்கியம், பொருளாதாரம் மற்றும் சூழலியலோடு நேரடியாகத் தொடர்புடையது. எனவே, பாபநாசம் முதல் கடல் வரை வாழும் மக்களிடம் 'நதி அறிவு' குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் நதியைத் தங்கள் ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாகக் கருதினால் மட்டுமே தூய்மைப் பணிகள் முழுமை பெறும்.

பல திட்டங்கள் காகித அளவில் அழகாக இருந்தாலும், களத்தில் அவை செயல்படுத்தப்படுவதில்லை. கங்கையுடன் ஒப்பிடும்போது தாமிரபரணி ஒரு சிறிய மற்றும் எளிய நதி. ராஜஸ்தானில் என்னால் 23 நதிகளை மீட்க முடிந்திருக்கும் போது, இந்தப் பகுதியில் தாமிரபரணியை மீட்பது மிகவும் எளிதான காரியம். இதற்கு நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகம் என அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தாமிரபரணி நதி குறித்த தனது முழுமையான ஆய்வறிக்கையை இன்னும் 20 முதல் 30 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளேன்'' என்றார்.

இதையும் படிங்க: தவெக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் - செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி