கோயிலாறு வனப்பகுதியில் 50 வயது பெண் யானை மர்மமான முறையில் உயிரிழப்பு - வனத்துறை விசாரணை
வயது மூப்பு காரணமாக யானை நோய்வாய்ப்பட்டு இறந்ததா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Published : July 5, 2026 at 5:20 PM IST
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கோவிலாறு அணைப் பகுதியில் பெண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியைச் சுற்றி மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இங்குள்ள மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, கரடி, காட்டுப்பன்றி, காட்டு மாடுகள், மான் மிளா உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அதிக அளவில் வெயில் கொளுத்தி வருவதால் நீர் ஓடைகள் வறண்டு காணப்படுகின்றன. இருந்தாலும் ஒரு சில இடங்களில் கிடைக்கும் தண்ணீரை குடிப்பதற்காக வனவிலங்குகள் அடிக்கடி மலை அடிவாரப் பகுதிகளுக்கு வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பிளவுக்கள் பெரியாறு அணை, கோவிலாறு அணை ஆகிய இரண்டு அணைகள் உள்ளன. இதில் கோவிலாறு அணையின் உள்ளே மேற்கு தொடர்ச்சி மலையில் வத்திராயிருப்பு வனச்சரகம் எஸ். கொடிக்குளம் பஞ்சம்தாங்கி பிரிவு மருதம்பாறையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. அந்த யானைக்கு சுமார் 50 வயது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்த யானை எப்படி இறந்தது? வயது மூப்பு காரணமாக யானை நோய்வாய்ப்பட்டு இறந்ததா அல்லது தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் வேறு ஏதும் விபத்து காரணமாக இறந்ததா என தெரியவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யானை இறந்து கிடந்த இடத்திற்கு கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக புலிகள் காப்பக இணை இயக்குvர் ரவி மீனா, வத்திராயிருப்பு வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் வனத்துறையினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து அந்த பகுதியிலேயே குழி தோண்டி அந்த யானை அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், யானையின் உயிரிழப்பு குறித்து வனத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காட்டுப் பகுதியில் பெண் யானை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

