வேலூரில் இரும்பு கம்பியால் தாக்கி கல்லூரி மாணவர் கொலை; சடலம் ஆந்திர எல்லையில் வீச்சு
கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர் புதுச்சேரியில் பதுங்கி உள்ளதாக வந்த தகவலை அடுத்து, தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

Published : January 3, 2026 at 9:34 PM IST
வேலூர்: வேலூரில் இரும்புக் கம்பியால் தாக்கி கல்லூரி மாணவரை கொன்று சடலம் ஆந்திரா எல்லையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பத்தியாவரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மகன் டேனி வளனரசு (19). இவர் வேலூரில் இருக்கும் கல்லூரியில் பி.ஏ டிபன்ஸ் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். வேலூர், சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டின் 3 ஆவது மாடியில் வாடகைக்கு தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.
அதே வீட்டில் ஆரணி இந்திரா நகர், தொந்திகரம் பட்டுவை சேர்ந்த கிஷோர் கண்ணன் (19), புதுச்சேரியை சேர்ந்த பார்த்தசாரதி (19) மற்றும் தர்மபுரியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஆகியோரும் தங்கி இருந்தனர். கடந்த 25 ஆம் தேதி தர்மபுரியைச் சேர்ந்த இளைஞர் தனது சொந்த ஊருக்கு சென்ற நிலையில் அவரை தொடர்ந்து டேனி வளனரசு, கிஷோர் கண்ணன் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இதன் பிறகு கடந்த 1 ஆம் தேதி மீண்டும் வேலூருக்கு திரும்பி வந்துள்ளனர். அன்று இரவு, நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் டேனி வளனரசுவை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவரது உடலை பார்த்தசாரதி மற்றும் கிஷோர் கண்ணன் ஆகியோர் பைக்கில் எடுத்துச் சென்று ஆந்திரா மாநில எல்லையில் இருக்கும் சித்தப்பாறை கிராம மலை அடிவார பகுதியில் வீசிவிட்டு தப்பியுள்ளனர்.
இதற்கிடையில் டேனி வளனரசுவை அவரது பெற்றோர் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோதும் முடியாததால் மகனை கண்டுபிடித்து தருமாறு பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் டேனி வளனரசுவை தீவிரமாக தேடினர்.
இந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் நண்பர் கிஷோர் கண்ணனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியபோது பார்த்தசாரதி டேனி வளனரசுவை கொலை செய்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய பார்த்தசாரதி புதுச்சேரியில் பதுங்கி உள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து, இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் தனிப்படை போலீசார் அவரை பிடிக்க புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர்.

வேலூரில் கல்லூரி மாணவரை சக நண்பர்களே அடித்துக்கொன்று சடலத்தை ஆந்திர எல்லையில் வீசிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

