முதல்வரின் உருவச்சிலைக்கு வீட்டில் தினமும் பூஜை; 'தெறி'க்கவிடும் விஜய்யின் 'வெறி'த்தனமான திருச்சி ரசிகர்
விஜய் முதலமைச்சர் ஆன பிறகு தான் மக்கள் அனைவரும் அவரை கொண்டாட தொடங்கியுள்ளனர். ஆனால், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவரை தீவிர ரசிகனாக நான் கொண்டாடி வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்

Published : June 3, 2026 at 9:09 PM IST
-BY அப்துல் கரீம்
திருச்சியைச் சேர்ந்த விஜய்யின் வெறித்தனமான ரசிகரும் தவெக நிர்வாகியுமான சுகுமார் சண்முகம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் உருவ சிலையை தமது வீட்டின் பூஜை அறையில் வைத்து, அன்றாடம் அதற்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்து வரும் நிகழ்வு பலதரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் சண்முகம். தீவிர விஜய் ரசிகராக அறியப்படும் இவர், விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே தன்னை அதில் இணைத்து கொண்டு பணியாற்றி வருகிறார். விஜய் கட்சி ஆரம்பித்த பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தின் முழு நேர தொண்டனாக தன்னை இணைத்துக் கொண்டு, அதிலும் தன்னுடைய தீவிர பங்களிப்பை இவர் அளித்து வருகிறார்.
இவர் எந்த அளவிற்கு தீவிர விஜய் ரசிகன் என்றால், தனது இல்லத்தில் கடந்த ஓராண்டாக விஜய்யின் உருவ சிலையை வைத்து வழிபடும் அளவிற்கு அவர் தீவிர விஜய் ரசிகனாக (பக்தனாக) உள்ளார். அவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தாரும் தினசரி விஜய்யின் உருவ சிலையை பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிகழ்வு தமிழக மக்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதேநேரத்தில், விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து சுகுமார் சண்முகம் நமது ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது அவர், "திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக தெற்கு மாவட்ட செயலாளர் அருள் அறிவிக்கப்பட்டார். அவர் தொகுதியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியைகூட தொடங்கிவிட்டார். ஆனால், திடீரென வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டு, நவல்பட்டு விஜி புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நேரத்திலும் கட்சியைவிட்டு விலகாமல், தொடர்ந்து தலைமை அறிவித்த வேட்பாளரின் வெற்றிக்காக உழைத்து அவரை வெற்றி பெற செய்தோம்.
| இதையும் படிங்க: தண்ணீர் கேட்பது போல் வீட்டுக்குள் நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டெலிவரி பாய்; சென்னையில் அதிர்ச்சி சம்பவம் |
வீட்டில் உள்ள விஜய் சிலையை போன்று மற்றொரு சிலையை தேர்தல் பிரச்சாரத்தின்போது உருவாக்கினோம். அதையே நவல்பட்டு விஜி தனது பிரச்சாரத்தின்போது பயன்படுத்தினார். விஜய் முதலமைச்சர் ஆன பிறகு தான் மக்கள் அனைவரும் அவரை கொண்டாட தொடங்கி உள்ளனர். ஆனால், இருபது ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே அவரை தீவிர ரசிகனாக தொடர்ந்து கொண்டாடி வருகிறேன்.
மேலும், கடந்த ஓராண்டாக எனது வீட்டில் விஜய்க்கு சிலை வைத்து வழிபாடு மேற்கொண்டு வருகிறேன். எங்களுக்கு தெய்வம் என்பது விஜய்தான். அவரை ஒரேயொரு முறை நேரில் பார்த்து ஆசிர்வாதம் பெற வேண்டும். கடவுள் மக்களுக்கு நன்மைகள் செய்வதுபோல, தமிழக முதலமைச்சரும் மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என தினசரி பிரார்த்தித்து வருகிறேன். தேர்தல் வாக்குறுதியில் அளித்த அனைத்தையும் முதலமைச்சர் விஜய் நிச்சயம் நிறைவேற்றுவார்" என்கிறார் சுகுமார் சண்முகம் நம்பிக்கையுடன்.

