டெல்டாவுக்கு குறி வைத்த விஜய் - அடுத்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு அனுமதி கோரி மனு
இந்த நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த சுமார் 4,900 நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

Published : February 28, 2026 at 4:14 PM IST
தஞ்சாவூர்: தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளவுள்ள நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி கோரி தஞ்சை மாவட்ட காவல்துறையிடம் அக்கட்சி நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் சேலம் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் பரப்பரை மேற்கொண்டார். இந்நிலையில், அடுத்த கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தவெக நிர்வாகிகளையும் சந்தித்து பேச உள்ளார். மார்ச் மாதம் 4ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் அடுத்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த சுமார் 4,900 நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாகவும், இந்த கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் கூறுகையில், "தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டியில் மார்ச் 4ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை, சுமார் 9 ஏக்கர் பரப்பளவு கொண்ட தனியார் திடலில் நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு 4,900 நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு வரும் நிர்வாகிகள் QR கோடு ஸ்கேன் செய்து திடலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு அனுமதி கேட்டு மனு அளித்துள்ளோம்" என்றார்.

