பாஜக மூலம் கௌரவமான சீட்டுகளை வாங்கி போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்
ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் இணைவார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Published : February 24, 2026 at 6:10 PM IST
மதுரை: அமமுக கட்சிக்கு தேவையான தொகுதிகளை கௌரவமான முறையில் பெறுவதற்கு பாஜக மூலம் முயற்சி செய்வோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ''தே.ஜ.கூட்டணியில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9% பேர் ஓர் அணியில் திரண்டு உள்ளோம். தீய சக்தி திமுக மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு உள்ளார்கள்.
ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் இணைவார்கள். எங்கள் கூட்டணியில் உள்ள நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். எங்கள் தொண்டர்கள் எப்படியும் ஒன்றிணைய மாட்டார்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்; பேசினார்கள். அமமுக மற்றும் அதிமுக கீழ் மட்டம் முதல், மேல் மட்டம் வரை உள்ள தொண்டர்கள் ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என முழு மனதோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இல்லை என பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. 35 லிருந்து 40 தொகுதிகள் வரை திமுகவிடம் காங்கிரஸ் கேட்கிறது. அது உண்மை. காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொடருமா? என்பது தெரியவில்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் ஏற்கெனவே மூன்று தொகுதியில் போட்டியிட்டும், தற்போது இரண்டு தொகுதிகள் தான் தருவோம் என்று திமுக சொல்கிறது. இதுபோன்ற நிலைமை எங்கள் கூட்டணியில் இல்லை. ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஆகிய நாங்கள் (அமமுக, அதிமுக) கருத்து வேறுபாடுகளை கடந்து ஓர் அணியில் சேர்ந்துள்ளோம். எங்கள் கட்சிக்கான தொகுதி பங்கீடு உடன்பாட்டை பாஜக மற்றும் அதிமுகவோடு பேசி நல்ல முறையில் நிறைவு செய்வோம்.
இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எந்த ஒரு பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல் ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. எந்த ஒரு சின்ன மன வருத்தமும் யாருக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காகதான் இந்த முடிவு. அமமுக கட்சிக்கு தகுதியான தொகுதிகளை கௌரவமான முறையில் பெறுவதற்கு பாஜக மூலம் முயற்சி செய்வோம்.
பாஜக வலியுறுத்தல் படி அமமுக செயல்படும். அதன்படியே, அதிமுக கூட்டணியில் நாங்கள் இடங்களை பெற்று, அமமுக வேட்பாளர்களாக போட்டியிடும் நபர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள்'' என்றார்.

