தமிழ்நாட்டில் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறப்பு; பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 4-ம் தேதி திறக்கப்படும் என்று செகி

Published : May 26, 2026 at 5:48 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் ஜூன் 4-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
2026-27 கல்வி ஆண்டில் 6 முதல் முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் வானிலை நிலவரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், பெற்றோர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றும், பள்ளிகள் திறப்பு ஜூன் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'நிர்வாக வசதியை உறுதி செய்யவும், வெவ்வேறு வகுப்புகளில் பயிலும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்க்கவும், அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே தேதியில் பள்ளிகளைத் திறக்கக் கோரி பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.
மேலும், தற்போது நிலவும் வானிலை சூழல், ஜூன் மாதத்தின் முதல் வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் பள்ளிகள் திறப்பு முன்னதாக செய்ய வேண்டியுள்ள அடிப்படை வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரம் - பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் |
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படியும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் உத்தரவின்படியும், 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் ஒரே நேரத்தில் ஜூன் 4-ம் தேதி திறக்கப்படும்.
மாணவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் போதுமான முன்னேற்பாடுகளை உறுதி செய்யுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மாணவர்கள் உடல் நலனைப் பாதுகாக்கும் வகையில், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும் என முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

