ETV Bharat / state

2 பல்கலைக்கழகங்களில் மூத்த பேராசிரியர்கள் துணைவேந்தர்களாக நியமனம் - புதிய முறையை கையாளும் தமிழக அரசு

புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, துணைவேந்தர்கள் நியமனத்திற்காக 5 பேர் கொண்ட தேடுதல் குழுவை அமைக்கலாம் என உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்தது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 31, 2026 at 6:00 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: துணைவேந்தர்களை நியமிப்பதில் சிக்கல் நீடித்துவரும் நிலையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய 2 பல்கலைக்கழங்களில் மூத்த பேராசிரியர்களை துணை வேந்தர்களாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை நியமித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 20 மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக தமிழ்நாடு ஆளுநர் இருந்து வருகிறார். இதில் 18 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை உள்ளது. மாநில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் கடந்த 5 ஆண்டுகளாக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்தது.

துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) உறுப்பினர் நியமனம் செய்யப்பட வேண்டும் என முன்னாள் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி வலியுறுத்தினார்.

ஆனால், அப்படி செய்தால் மாநில உரிமைகள் கேள்விக்குறியாகும் என கூறிய முந்தைய திமுக அரசு, மாநிலத்தின் நிதியில் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களின் ஆளுநர் வேந்தராக இருக்கக்கூடாது, மாநிலத்தின் முதலமைச்சர்தான் வேந்தராக இருக்க வேண்டும் என்றது. மேலும், அதற்கான சட்ட திருத்தமும் மேற்கொள்ளப்பட்ட அந்த மசோதா ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது திமுக அரசிற்கு சாதகமாக அமைந்தது. இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, அதன் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.

இதன் காரணமாக, 18 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனத்திற்கான தேடுதல் குழுவை அமைப்பதில் சிக்கல் தொடர்ந்தது. துணைவேந்தர்கள் இல்லாததால் பல்கலைக்கழகங்கள் நிர்வாக பிரச்சனைகளில் சிக்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜெயகாந்தன்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜெயகாந்தன் (Alagappa University)
இதையும் படிங்க: அருந்ததியர்களுக்கான 3 சதவீத உள்ஒதுக்கீடு தொடரும் - அமைச்சர் வன்னி அரசு உறுதி

இந்த சூழலில், புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, துணைவேந்தர்கள் நியமனத்திற்காக 5 பேர் கொண்ட தேடுதல் குழுவை அமைக்கலாம் என உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்தது. அதற்கான சட்ட மசோதா, தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இன்று (ஆகஸ்ட் 31) வரையில் அதற்கான நகர்வு மேற்கொள்ளப்படவில்லை.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பிரபாகர்
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பிரபாகர் (Manonmaniam Sundaranar University)

இந்த நிலையில், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் மூத்த பேராசிரியரை, துணைவேந்தராக கூடுதல் பொறுப்பில் நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் பிரபாகர் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் ஜெயகாந்தன் ஆகியயோர் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வரிசையில் அடுத்ததாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட மற்ற பல்கலைக்கழகங்களிலும் கூடுதல் பொறுப்பு நிலையில் துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.