எம்.பி ஜோதிமணியை தரக்குறைவாக பேசிய கரூர் பாஜக மாவட்ட தலைவர்: கொதித்தெழுந்த காங். மகளிர் அணி
பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மார்ச் 8 மிகப்பெரிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் மகளிர் அணி அறிவித்துள்ளது.

Published : February 23, 2026 at 9:28 PM IST
சென்னை: எம்.பி ஜோதிமணியை தரக்குறைவாக பேசிய பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதனை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக அநீதிகள் நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, பிப்.10ம் தேதி பாஜக சார்பில் கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த எம்.பி ஜோதிமணி கரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது எக்ஸ் தளப்பக்கத்தில், “கரூர் மாவட்ட காவல்துறையின் செயல்பாடு வெட்ககேடானது. ஒரு பெண்ணை, நாடாளுமன்ற உறுப்பினரை பொதுவெளியில் ஆபாசமாக பேசிய பாஜக மாவட்ட தலைவரை வேண்டுமென்றெ கைது செய்யாமல் விட்டுவைத்து, குற்றவாளி முன்ஜாமீன் பெறுவதற்கு மறைமுகமாக உறுதுணையாக இருந்துள்ளனர்.
பாஜகவின் கைப்பாவையாக காவல்துறை செயல்படுகிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு பாஜகவிற்கு அடிபணிந்து சேவகம் செய்வதற்கு எதற்கு ஒரு காவல்துறை? இதில் எந்த பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு கிடையாதா? இப்படித்தான் பெண்களை பாதுகாப்பதா? அரசியல் தலையீடு இல்லாமல் இது நிச்சயம் நடந்திருக்க முடியாது. பெண்களை பாதுகாப்பதற்கு பதிலாக குற்றவாளிகளை பாதுகாக்கிற இந்த காவல்துறையின் கீழ் மிக நிச்சயமாக பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. காவல்துறையில் பாஜகவிற்கு இருக்கும் செல்வாக்கு அதிர்ச்சியளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
கரூர் மாவட்ட காவல்துறையின் செயல்பாடு வெட்ககேடானது. ஒரு பெண்ணை,நாடாளுமன்ற உறுப்பினரை பொதுவெளியில் ஆபாசமாக பேசிய பாஜக மாவட்ட தலைவரை வேண்டுமென்றெ கைது செய்யாமல் விட்டு வைத்து,குற்றவாளி முன் ஜாமீன் பெறுவதற்கு மறைமுகமாக உறுதுணையாக இருந்துள்ளனர்.
— Jothimani (@jothims) February 23, 2026
பாஜகவின் கைப்பாவையாக காவல்துறை…
இந்த நிலையில், பாஜகவின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதனின் பேச்சை கண்டித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, செந்தில்நாதனை கைது செய்ய வேண்டும் என சாலையின் நடுவே அமர்ந்தும், பதாகைகளை ஏந்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத், “கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குறித்து தரக்குறைவாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் மிகவும் கீழ்த்தரமாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெண்கள் குறித்து இழிவாகப் பேசியதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகையால், உடனடியாக செந்தில்நாதனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
| இதையும் படிங்க: மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை என புகார் - பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் வாக்குவாதம் |
அவர் மீது ஏற்கனவே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டும், இன்னும் கைது செய்யவில்லை என்பது வேதனையாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த பெண் தலைவர்கள் வானதி சீனிவாசன், குஷ்பூ, தமிழிசை உள்ளிட்ட யாரும் பேசவில்லை. அடிக்கடி பெண் சுதந்திரம் என்று கூறி கொள்ளும் பாஜகவினர் இப்போது எங்கே போனார்கள்? எங்கே போனது பெண் சுதந்திரம்? இந்தியாவில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் விஷயங்களில் பாஜக பெண் தலைவர்கள் வாய் திறப்பதில்லை” என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும், “தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் புகார் கொடுத்துள்ளோம். காவல்துறையினர் பிப்.15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து, தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே இன்னும் ஒரு வாரத்தில் செந்தில்நாதனை கைது செய்யவில்லை என்றால், வரும் மார்ச் 8 மிகப்பெரிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்” என எச்சரித்தார்.

