காங்கிரஸ் அழிவுப்பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது - தேசிய கட்சிக்குள் புயலை கிளப்பிய ஜோதிமணி எம்.பி.
மக்கள் பிரச்சனைகளுக்காக அல்லாமல் தவறான காரணங்களுக்காகவே தமிழ்நாடு காங்கிரஸ் தினமும் செய்திகளில் அடிபடுகிறது.

Published : January 2, 2026 at 4:13 PM IST
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் அழிவுப்பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது என்று அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி பகிரங்கமாக குற்றச்சாட்டி உள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அவரது இந்த குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சிக்குள் புயலை கிளப்பும்படியாக உள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் உட்கட்சிப் பூசல் சமீபகாலமாக தலைத்தூக்கி வருகிறது. அக்கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி கட்சிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புயலை கிளப்பியது. இந்த புயல் முழுவதுமாய் அடங்குவதற்குள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தற்போது மற்றொரு புயலை கிளப்பி உள்ளார். காங்கிரஸ் கட்சி அழிவின் பாதையில் செல்வதாக அவர் பகிரங்கமாக குற்றச்சாட்டி உள்ளது அக்கடசியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'எந்தவொகு அரசியல் கட்சியும் தனது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரை, தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச்சாவடி முகவர் பட்டியலை கொடுக்கவிடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது.
தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விஷயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப்போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. மக்கள் பிரச்சனைகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே தமிழ்நாடு காங்கிரஸ், தினமும் செய்திகளில் அடிபடுகிறது' என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் 'தமிழ்நாடு எந்தக் காலத்திலும் இல்லாத ஒரு பேராபத்தை, மதவாத, பிரிவினைவாத, வன்முறை சக்திகளிடமிருந்து எதிர்நோக்கி உள்ளது. எதையாவது செய்து, மக்கள் உணர்வுகளைத் தூண்டி, ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து, பெருந்தலைவர் காமராசர், பெரியார் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், எதிர்நோக்கியுள்ள தேர்தலை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.
இதையும் படிங்க: விஜய் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து கூறியது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி
ஆனால், காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பை சரியாக உணர்ந்துள்ளதா? என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாதபோதும் தொடர்ந்து காங்கிரஸ் கொடியை ஒவ்வொரு ஊரிலும் பெருமையோடு கையில் ஏந்தியிருக்கும் கட்சித் தொண்டர்களின் உணர்வுகளையும், மதவாத, பிரிவினைவாத சூழ்ச்சிக்கு அடிபணியாமல் சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதியோடு இருக்கும் நமது தமிழ்நாட்டு மக்களையும் நாம் கைவிட்டு விடக்கூடாது.
எந்த ஒரு அரசியல் கட்சியும் ,தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை,தேர்தல் நேரத்தில்,தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது.
— Jothimani (@jothims) January 2, 2026
தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விசயங்கள் மிகுந்த கவலை…
தமிழ்நாடு காங்கிரசில் எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல், கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு, ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது,' என்றும் அவர அறைகூவல் விடுத்துள்ளார்.
'தலைவர் ராகுல் காந்தியின் தன்னலமற்ற, கொள்கைப்பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பிற்கும், ஒப்பற்ற தியாகத்திற்கும் நாம் துரோகம் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம், மரியாதை என்பது பெருந்தலைவர் காமராசர் கட்டிக் காத்த பாரம்பரியத்திற்கும், நேரு, காந்தி குடும்பத்தின் தியாகத்திற்குமான தமிழ்நாட்டு மக்களின் அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.' எனவும் ஜோதிமணி எம்.பி. தமது பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

