ETV Bharat / state

மத்திய கிழக்கில் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

தென் மாவட்டங்களில் சாதியின் பெயரால் வன்முறை வெறியாட்டத்தைத் தூண்டிவிட்டு, சங்பரிவார்கள் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கின்றனர் என திருமாவளவன் கூறியுள்ளார்.

ஈரான் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி இடதுசாரிகள் மற்றும் விசிக கட்சிகள் ஆர்ப்பாட்டம்
ஈரான் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி இடதுசாரிகள் மற்றும் விசிக ஆர்ப்பாட்டம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 4, 2026 at 1:07 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, போரை நிறுத்த அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி இடதுசாரிகள் மற்றும் விசிக கட்சிகள் ஒருங்கிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், சிபிஐ (எம்) மாநில செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, ”மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் சார்பில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஈரான் மீது நடத்தப்படுகிற கொடூரமான ஏவுகணைத் தாக்குதல்களை உடனடியாக அமெரிக்க ஏகாதிபத்தியமும், இஸ்ரேலும் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம். மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு போரை நிறுத்த அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். மேலும் அமைச்சரவையைக் கூட்டி, போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

அத்துடன் வளைகுடா நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற லட்சக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், ஈழத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் அனைவரின் உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே இந்தப் போரை உடனடியாக நிறுத்த வேண்டும். அங்குள்ள புலம் பெயர்ந்த இந்தியர்கள், தமிழர்கள் அனைவரையும் பாதுகாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்றார்.

இதனையடுத்து நாங்குநேரி சம்பவம் பற்றி பேசிய திருமாவளவன், ”நாங்குநேரியில் நடந்த கொடூர சம்பவத்தில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டு, பல பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் காவல் துறை கைது செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளோம். தென் மாவட்டங்களில் சாதியின் பெயரால் வன்முறை வெறியாட்டத்தைத் தூண்டி விட்டு, அரசியல் ஆதாயம் தேட சங்பரிவார்கள் முயற்சி செய்கின்றனர் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கு ஒத்திகையோ இந்தச் செயல் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த சம்பவத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். எனவே இதன் பின்னணியை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஈரான் தாக்குதல்: 3 நாட்களுக்கு பிறகு துபாயிலிருந்து சென்னை திரும்பிய 217 பேர்

இதனையடுத்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், “சட்ட திட்டங்களை மீறி மனிதகுலத்தின் எதிரி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது அமெரிக்க ஏகாதிபத்தியம். ரோம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசிப்பதாகச் சொல்வார்கள், அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் மத்திய கிழக்கு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா பார்வையாளராக இருக்கிறது. லட்சக்கணக்கான இந்தியர்கள், தமிழர்கள் வளைகுடா பகுதிகளில், அரபுப் பகுதிகளில் இருக்கிறார்கள். அவர்களைப் பத்திரமாக மீட்டெடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.