தவெக ஆட்சியில் பத்து பைசா கூட கமிஷன் கிடையாது - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
நான் பதவிகளுக்காக வாழ்பவன் அல்ல என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Published : July 3, 2026 at 9:44 AM IST
தூத்துக்குடி: தவெக ஆட்சியில் பத்து பைசா கூட கமிஷன் கிடையாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுக்சூழல் பாதுகாப்பு தொடர்பான பொதுக்கூட்டம் விவிடி சிக்னல் அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வழக்கறிஞர் ஹென்றி திபேன், மே 17 இயக்க ஒங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கடந்த முறை 10 லட்சம், 10 கோடி என கொடுக்க வேண்டும் என்ற முறை இருந்ததாகவும், தற்போது பத்து பைசா கூட கமிஷன் கிடையாது என மக்கள் சொல்வதாகவும் தெரிவித்தார்.
தவெக ஆட்சி எப்படி உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ லஞ்சம், ஊழல் என்ற சொல்லுக்கு இடமில்லாமல், கமிஷன், கரப்ஷன் என்று தலை விரித்தாடிய ஊழலுக்கு இடமில்லாமல் நேர்மையான ஆட்சியை முதலமைச்சர் விஜய் நடத்துகிறார்.
பத்து பைசா கமிஷன் கிடையாது#MDMKVaiko | #preesmmet | #NoCommission | #cmvijay | #tvkgovernment | #EtvBharatTamilNadu pic.twitter.com/H4BlKe0DbB
— ETV Bharat Tamil Nadu (@ETVBharatTN) July 3, 2026
இந்த ஆட்சியை எல்லா மக்களும் விரும்புவதோடு மட்டுமல்லாமல் கடந்த முறை 10 லட்சம் கொடுக்க வேண்டும், 10 கோடி கொடுக்க வேண்டும் என்ற முறை இப்பொழுது கிடையாது. பத்து பைசா கமிஷன் கிடையாது என எல்லோரும் கூறுகிறார்கள். போகப் போக நிர்வாக நுணுக்கங்களை முதலமைச்சர் விஜய கற்றுக் கொள்வார். வெற்றிகரமாக ஆட்சி நடத்துவார்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக கூட்டத்தில் பேசிய அவர், “பிரதமர் மோடியுடன் கூட்டணியில் இருந்தேன். பதவியேற்பு விழாவுக்கு ஸ்டெர்லைட் முதலாளிகளை அவர் அழைத்தார். அப்போது நீங்கள் கொலைக்கார பாவியை ஏன் அழைத்தீர்கள் என கேள்வி கேட்டு, கூட்டணியில் இருந்து வெளியேறினேன். இந்தியாவிலேயே பிரதமர் பதவி பிரமாணத்தின் போது அவரை எதிர்த்த ஒரே இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தான்.
நான் பதவிகளுக்காக வாழ்பவன் அல்ல; எம்எல்ஏ பதவி காலியாகும், அந்த இடத்தில் வைகோ நின்று மந்திரியாக ஆசைப்படுகிறார் என்று கூறுகிறார்கள். மத்தியில் கேபினட் மந்திரி கொடுக்கிறோம் என்று எவ்வளவோ கூறினார்கள். அந்த மாதிரியான எந்த சுயநலத்திற்கும் நான் ஆசைப்பட்டதில்லை. என் கரங்கள் கறை படியாதது என்று இயற்கை சொல்லும். என் நேர்மையை இந்த நிமிடம் வரை காத்து வருகிறேன். சாகும்வரை காப்பாற்றுவேன். நேர்மை, நியாயத்தை நான் தவறியது கிடையாது” என்று பேசினார்.

