திரையரங்குகளில் அதிக காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும் - தமிழ் குமரன் கோரிக்கை
திரையரங்குகளில் ஒரு காட்சிக்கும், மற்றொரு காட்சிக்குமான இடைவேளையை அரை மணி நேரமாக குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Published : March 4, 2026 at 4:50 PM IST
சென்னை: திரையரங்குகளில் அதிக காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தமிழ் குமரன் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தலைவர் தமிழ் குமரன், “2026 - 29 ஆண்டுக்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தோம், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தோம். எங்க சங்கத்தினுடைய கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கியுள்ளோம். எங்களது கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கின்றோம்.
எங்களது முக்கிய அம்ச கோரிக்கையாக தயாரிப்பாளர்களுக்கு மூன்று ஆண்டுகளாக மானியங்கள் தரப்படவில்லை, மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கையாக வைத்துள்ளோம். மேலும் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு இல்லை, அதற்கான இடத்தை உருவாக்கி தருவார்கள் என எதிர்பார்க்கின்றோம். நடிகர்கள் பழைய முன்பணங்கள் தர வேண்டும் என கூறியுள்ளனர். அதை ஒழுங்குபடுத்தி ஒரு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளோம். அனைத்தும் மறுசீரமைப்பு செய்ய இருக்கின்றோம், பல்வேறு சங்கங்கள் பிரிந்திருக்கிறது. இந்த சங்கங்கள் அனைத்தும் ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தாய் சங்கம் தான், மிகவும் பாரம்பரியமான சங்கம், இது நிச்சயம் வலுபெறும், கோரிக்கைகளை நாங்கள் துணை முதலமைச்சரிடம் வைத்துள்ளோம். அவர் கண்டிப்பாக செய்வார், ஏனென்றால் அவருக்கு சினிமாவைப் பற்றி அனைத்தும் தெரியும், அதேபோல தமிழ்நாடு முதலமைச்சரிடமும் நாங்கள் தெரிவித்துள்ளோம், எங்களுக்கு கோரிக்கையை அவர்கள் நிறைவேற்றி தருவார் என்று நாங்கள் நம்புகின்றோம்” என்றார்.
| இதையும் படிங்க: 'திக் திக்' பணிகளில் 8 ஆண்டுகள் சேவை... சென்னை ஏர்போர்ட் பாதுகாப்பு பிரிவில் இருந்து 3 மோப்ப நாய்கள் ஓய்வு! |
நிறைய படங்களுக்கு திரையரங்குகில் வெளியிட வாய்ப்பு கிடைக்காமல் போவது குறித்த கேள்விக்கு, “இதில் நிறைய பிரச்சனை இருக்கிறது, திரையரங்குகளில் ஒரு காட்சிக்கு மற்றொரு காட்சிக்குமான இடைவேளையை குறைக்க வேண்டும். ஒரு காட்சி முடிந்த பிறகு அரை மணி நேரத்தில் அடுத்த காட்சியை திரையிட அனுமதிக்க வேண்டும். மேலும் அதிக காட்சிகளை திரையிடுவதற்கு அனுமதி கேட்டுள்ளோம்” என்றார்.

