திருச்சி திமுக மாநில மாநாடு - விறுவிறுப்பாக நடைபெறும் இறுதிகட்ட பணிகள்
திருச்சியில் வருகின்ற மார்ச் 9ஆம் தேதி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published : February 27, 2026 at 3:52 PM IST
திருச்சி: திமுக மாநில மாநாடு திருச்சியில் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம் ஆகிய பணிகளில் அனைத்து கட்சிகளும் வேகம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் வரும் மார்ச் 9ஆம் தேதி நடைபெறவுள்ள திமுகவின் பிரம்மாண்ட மாநில மாநாட்டிற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, திமுகவின் பலத்தை நிரூபிக்கும் ஒரு திருப்புமுனை மாநாடாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இருந்து இந்தக் கூட்டத்துக்கு வந்து செல்வோா் பாதுகாப்பாக திரும்பும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மாநாட்டிற்கு பிரமாண்ட ஏற்பாடுகள்
அந்த வகையில் பிரமாண்ட மேடையுடன் அமைக்கப்பட்டு வரும் இந்த மாநாட்டு திடலில், லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு உணவுக்கூடங்கள், குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. மேலும் மாநாடு மேடை மற்றும் பாா்வையாளா்கள் அமரும் பகுதி மட்டும் 400 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. இவைத்தவிர வாகனங்கள் நிறுத்த 200 ஏக்கா் இடம் தயாா் படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் 5 லட்சம் லிட்டா் கொள்ளளவுக்கான குடிநீா்த் தொட்டிகள் ஆங்காங்கே அமைக்கப்படவுள்ளன. இந்த மாநாட்டில் சுமாா் 10 லட்சம் போ் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 5 ஆயிரம் பாா்வையாளா்கள் வரையில் தனித்தனியே பிரித்து பாக்ஸ் போன்ற அமைப்பில் அமர வைப்பதற்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. மாநாட்டின் தொடக்கமாக திமுக கொடி ஏற்றுவதற்காக 100 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பம், பொதுக்கூட்ட நிகழ்வுகளை ஒளிபரப்ப 300 அடி தொலைவுக்கு பிரமாண்ட எல்இடி திரைகள் அமைக்கப்படவுள்ளது.
| இதையும் படிங்க: சுயமாக சிந்தித்துதான் திமுகவில் இணைந்தேன்; அனைவரையும் அரவணைக்கும் போக்கு அதிமுகவில் இல்லை - ஓபிஎஸ் ஓபன் டாக் |
இந்த மாநாட்டில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்நிலையில் மாநில மாநாட்டுக்காக நடைபெற்று வரும் பணிகளை அக்கட்சியின் முதன்மை செயலரும், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

