சிங்கப்பெண் சிறப்பு படைக்கு தற்காலிகமாக 18 அதிகாரிகள் நியமனம்
சிங்கப்பெண் சிறப்புப் படையின் காவல் கண்காணிப்பாளர் (IGP) அனுப்பிய கோரிக்கை கடிதத்தின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல் துறைத் தலைவர் அலுவலகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Published : May 30, 2026 at 10:43 PM IST
சென்னை: தமிழ்நாடு காவல் துறையின் சிங்கப்பெண் சிறப்பு படைக்கு சைபர் கிரைம், சமூக ஊடகப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இருந்து 18 அதிகாரிகள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல் துறைத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, சிங்கப்பெண் சிறப்புப் படை (Singappen Special Force - SSF) பணிக்காக காவல் துணை ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் என மொத்தம் 18 பேர் தற்காலிக அடிப்படையில் (OD Basis) பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தற்காலிக அடிப்படை பணி என்பது, ஒரு காவலர் அல்லது அதிகாரி தனது சொந்த பிரிவின் பணியிடத்தை நிரந்தரமாக விட்டு செல்லாமல், குறிப்பிட்ட காலத்திற்கு வேறு ஒரு பிரிவு அல்லது சிறப்புப் பணிக்காக தற்காலிகமாக பணியமர்த்தப்படுவதை குறிக்கும்.

| இதையும் படிங்க.. ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் |
சிங்கப்பெண் சிறப்புப் படையின் காவல் கண்காணிப்பாளர் (IGP) அனுப்பிய கோரிக்கை கடிதத்தின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல் துறைத் தலைவர் அலுவலகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, சைபர் கிரைம் பிரிவைச் சேர்ந்த துணை ஆய்வாளர்கள் நவீன், திவ்யதங்கம் உள்ளிட்டோர் மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, சமூக ஊடகப் பிரிவு, சென்னை பெருநகர காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த காவல் துறையினர் சிங்கப்பெண் சிறப்புப் படையில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர்.

பணியமர்த்தப்பட்டவர்களில் பி.விஜய், ஏ.முத்துசெல்வன், எஸ்.அருண்குமார், சி.லோகேஸ்வரன், பி.பாலமுருகன், ஆர்.திவாகரன், டி.பாலமுருகன், எஸ்.ரமேஷ், கே.பிரகாஷ், எஸ்.விக்னேஷ், நிர்மல் குமார், நவீன் குமார், எஸ்.அறிவழகன், பாலமுருகன், வி.சுரேஷ், கே.எழிலரசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
| இதையும் படிங்க... சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை: நெல்லை எஸ்.பி எச்சரிக்கை |
மேற்கண்ட காவல் துறையினரை உடனடியாக விடுவித்து, சென்னை சிங்கப்பெண் சிறப்புப் படை காவல் கண்காணிப்பாளர் முன்பு ஆஜராக சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் விடுவிக்கப்பட்ட விவரங்களை தமிழ்நாடு காவல்துறை தலைமையகத்திற்கு உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

