''பொங்கல் சிறப்பு பேருந்துகள்'' - புறப்படும் இடம்... முன்பதிவு மையங்கள் முழு விவரம்
பொங்கல் திருநாளையொட்டி 9 முதல் 14 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 22,797 பேருந்துகள் மற்றும் பிற ஊர்களில் இருந்து 11,290 சிறப்பு பேருந்துகள் என 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Published : January 6, 2026 at 8:49 PM IST
சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்களை தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்.
2026 ஆம் ஆண்டு வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்து துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
பொங்கல் திருநாளையொட்டி, வரும் 9-ம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2092 பேருந்துகளுடன் 10,245 சிறப்பு பேருந்துகள் என்று 6 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 22,797 பேருந்துகள் மற்றும் பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட நாட்களுக்கு 11,290 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 34,087 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பொங்கல் திருநாள் முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 6,820 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தமாக 15,188 பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 9,820 என மொத்தம் 25,008 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
கிளாம்பாக்கம் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு பேருந்துகள்
* கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT) கிளாம்பாக்கம் 'மப்சல்' பேருந்து நிலையத்தில் இருந்து
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
* கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT) கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கோயம்பேடு நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு பேருந்துகள்
கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில இருந்து கிழக்கு கடற்கரை சாலை (ECR), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மாதவரம் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு பேருந்துகள்
மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதற்கு பதிலாக (OMR) திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்றுச்சாலை வழியாக செல்லாம்.
முன்பதிவு மையங்கள்
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கத்தில் 10 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் 1 முன்பதிவு மையமும் வருகிற 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட உள்ளன.
முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணைய தளங்கள் மற்றும் Watsapp Number 9444018898 மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் முன்பதிவு செய்யும் பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையங்களில் பேருந்து நிறுத்தப்பட்டு உள்ள நடைமேடை விவரங்களை (Plotform) ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே Know your Bus என்ற வசதி மூலம் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
24 மணி நேர புகார் மற்றும் சேவை குறைபாடு மையம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக 9445014436 என்ற தொலைபேசி எண்ணை (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் புகார்களுக்கு 1800 425 6151 (Toll Free Number) மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
24 மணி நேர தகவல் மையம்
இது மட்டும் இல்லாமல் பயணிகளின் நலன் கருதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும். மேலும், பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| இதையும் படிங்க: 'விஜய் படத்துடன் ஜெபம்' - திரைப்பட விளம்பரத்திற்கு தடை விதித்த தூத்துக்குடி பனிமய மாதா பேராலய நிர்வாகம் |
எனவே பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பயணிக்க முன்பதிவு வசதியை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும். இவ்வாறு தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

