சென்னையில் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது - போலீசில் சிக்கியது எப்படி?
கைது செய்யப்பட்டவர் காவல் துறையில் பணிபுரிவதாக கூறி சுமார் ஒரு கோடி மோசடி செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

Published : January 6, 2026 at 4:24 PM IST
சென்னை: அரசு துறைகளில் வேலை செய்வதாக கூறி பல்வேறு நபர்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் (23). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் இளைஞர் ஒருவரிடம் இருந்து புதிய பல்சர் 220 வாகனத்தை வாங்க முடிவு செய்து அவரிடம் ரூ.24 ஆயிரம் பணம் கொடுத்தார். இதில், பணத்தை பெற்றுக் கொண்ட இளைஞர் வாகனத்தை பெயர் மாற்றி தருவதாக கூறி எடுத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து முகமது ரிஸ்வான் அந்த இளைஞருக்கு தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்காமல் இருந்தார். தொடர்ந்து, அந்த இளைஞர் கடந்த மாதம் ரிஸ்வானை தாம்பரம் பகுதிக்கு வரவழைத்து அவரது செல்போனை பறித்துக் கொண்டு சென்றார். இதனால், தான் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த ரிஸ்வான் இது குறித்து தாம்பரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மோசடி செய்த நபர் சென்னை நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (35) என்று தெரிய வந்தது. அதன்படி, அவரது வீட்டிற்குச் சென்ற நிலையில், அவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வீட்டிற்கு வருவது இல்லை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அவரது செல்போன் எண்ணை டிராக் செய்ததில் அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் இருந்ததால் அவரை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

மேலும், விசாரணையில் சசிகுமார் தொடர்ந்து செல்போனில் பேசிய எண்ணை தொடர்பு கொண்ட போது பெண் ஒருரிடம் தான் ரயில்வே துறையில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருவதாக கூறி காதலித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், நேற்று சென்னை சானிடோரியம் பகுதியில் சசிகுமாரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், சசிகுமார் பல நபர்களிடம் நட்பாக பழகி கடனை பெற்று திருப்பி தராமல் கடந்த 10 ஆண்டுகளாக பல லட்ச ரூபாய் மோசடி செய்து வந்தது தெரிய வந்தது.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தாம்பரத்தைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.3.5 லட்சமும், ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண்ணிடம்ரூ. 50 ஆயிரமும், தாம்பரத்தைச் சேர்ந்த கரும்பு ஜூஸ் கடைக்காரரிடம் ரூ. 60 ஆயிரம் ஏமாற்றி பணம் வாங்கி புதிய பல்சர் இரு சக்கர வாகனத்தை வாங்கியதும் தெரியவந்தது.
மேலும், சசிகுமார் மீது பெரம்பலூர் அரியலூர் மாவட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் நிலைகளில் இருப்பதும், காவல்துறையில் பணிபுரிவதாக கூறி சுமார் ஒரு கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சசிக்குமாரிடமிருந்து சுமார் 22 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றிய போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

