இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்: மத்திய கிழக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் 28 விமானங்கள் ரத்து
துபாய், அபுதாபி, சார்ஜா, தோகா, மஸ்கட், பக்ரைன் உள்ளிட்ட விமானங்கள் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுள்ளது.

Published : March 1, 2026 at 7:41 AM IST
சென்னை: இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் காரணமாக, சென்னை விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான அணு ஆயுத ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வந்த நிலையில், ஈரான் அமெரிக்காவின் ஒப்பந்தத்திற்கு அடிபணிய மறுத்து வந்தது. இதுபோன்ற சூழலில், நேற்று திடீரென ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்த தொடங்கியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானும் அமெரிக்காவின் ஏவுதளங்கள் இருக்கும் பகுதிகளை குறிவைத்துத் தாக்க தொடங்கியது. இதனால், போர் பதற்றம் நிலவி வருகிறது.
குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதால், ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் தங்களுடைய வான்வழிப் பகுதிகளை மூடிவிட்டது. அதேபோல, இஸ்ரேலும் தமது வான்வெளியை பொது விமான போக்குவரத்து பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதிகளில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் எதிரொலியாக, ஏர் இந்தியா, இண்டிகோ போன்ற முக்கிய விமான சேவைகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படவில்லை. அதன்படி, சென்னை விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை துபாய், அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் 16 விமானங்களும்; இன்று அதிகாலையில் இருந்து மதியம் வரை இயக்கப்படும் 12 விமானங்களும் என மொத்தமாக 28 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, போர் பதற்றம் நிலவுவதால் விமான ரத்துகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதோடு லண்டன், அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை வரும் பல்வேறு விமானங்கள், ஈரான் வான் வழியை கடந்து வரவேண்டிய நிலையில் உள்ளது. ஈரான் வான்வழி மூடப்பட்டுள்ளதால், மாற்றுப் பாதைகளில் சுற்றி வருவதால், அந்த விமானங்கள் சென்னைக்கு வந்து விட்டு மீண்டும் புறப்பட்டு செல்வதற்கு பல மணி நேரம் தாமதம் ஆகலாம் அல்லது விமானம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே, மற்ற விமானங்களில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளும், அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்கள் வரும் நேரம், மீண்டும் சென்னையிலிருந்து புறப்பட்டு செல்லும் நேரம் போன்றவைகளை தெளிவாக தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தார் போல் தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளும் படியும் அறிவுறுத்தியுள்ளனர்.

