தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு; சிறுவனை வெட்டி சாய்த்த மர்ம கும்பல்
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனைக்கு சிலர் பஞ்சாயத்து பேச சென்றதாகவும் அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதும் தெரியவந்துள்ளது.

Published : February 27, 2026 at 2:08 PM IST
தூத்துக்குடி: பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் மதன்ராஜ் (17). இவர் நேற்று இரவு சங்கரலிங்கபுரம் மூன்றாவது தெரு வளைவு அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் போட்டு வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் கணேசன் உள்ளிட்ட சிலரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சிலர் தப்பி ஓடி உள்ளனர்.
அப்போது மதன்ராஜ் மட்டும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த மதன்ராஜை அந்த கும்பல் சரமாரியாக கழுத்து, கை, தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு பைக்கில் தப்பிச் சென்றுள்ளது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மதன்ராஜை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, போலீசுக்கும் தகவல் தெரிவித்துவிட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்துள்ளனர்.

| இதையும் படிங்க: ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார் |
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மதன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்தை கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், காவவ் ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சிலர் பஞ்சாயத்து பேச சென்றதாகவும், அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

