திருமண பேச்சை எடுத்ததும் சாதியை சொல்லி இழிவுபடுத்திய காதலன்; விபரீத முடிவு எடுத்த மாணவி
சாதியை காரணம் காட்டி நண்பர்களுடன் சேர்ந்து காதலன் மிரட்டியதால் கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published : March 4, 2026 at 7:14 PM IST
சேலம்: காதலித்து விட்டு திருமணம் செய்துகொள்ள மறுத்ததோடு, சாதிரீதியாக இழிவுபடுத்தி காதலன் மிரட்டியதால் கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள கல்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் நங்கவள்ளி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர். இவரை இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் (மாற்று சமூகம்) கார்த்திகேயன் காதலித்து வந்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த மாணவி படிப்பை முடித்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என கார்த்திகேயனிடம் கேட்டுள்ளார். இதற்கு கார்த்திகேயன், ''நீ தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். அதனால் திருமணம் செய்ய முடியாது'' என தெரிவித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத மாணவி மனம் உடைந்து கடந்த 13 நாட்களுக்கு முன்பு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்று உள்ளார்.
இது சம்பந்தமாக மாணவியின் பெற்றோர் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், போலீசார் முறையான விசாரணையில் ஈடுபடாமல் மெத்தன போக்குடன் செயல்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இது தொடர்பாக மாணவியின் தாயார் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அதில், ''எங்கள் மகளுடன் நெருக்கமாக பழகி வந்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்திய கார்த்திகேயன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் கார்த்திகேயன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் இரு தினங்களுக்கு முன்பு ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில், மாணவி நேற்று (மார்ச் 4) மாலை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், ''கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்த்திகேயன் மாணவியை இளம்பிள்ளை அருகில் உள்ள சித்தர் கோயில் மலைப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, கார்த்திகேயனும், அவரது நண்பர்களும் சேர்ந்து மாணவியை சாதிரீதியாக மிரட்டி துன்புறுத்தியுள்ளனர். அதனால் மனமுடைந்த மாணவி விபரீத முடிவு எடுத்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் முறையான விசாரணை நடத்தவில்லை.
தற்போது தற்கொலைக்கு முயன்ற எனது மகள் உயிரிழந்துள்ளார். மகளின் மரணத்துக்கு நீதி வேண்டும். தற்கொலைக்கு காரணமாக இருந்த கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். அவர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அரசு உரிய நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். மாணவி குடும்பத்தினர் குடியிருந்து வரும் பகுதியில் ஆதிக்க சமூகத்தினரால் அச்சுறுத்தல் உள்ளதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை தொடர்ந்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அருந்ததியர் மக்கள் அமைப்பு ஒன்றாக சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல: வாழ்வதற்கு புது நம்பிக்கையைப் பெற தமிழ்நாடு அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-ஐ தொடர்பு கொண்டு பேசலாம். சிநேகா தொண்டு நிறுவனத்தை தொலைபேசி மூலமாக +91 44 2464 0050 +91 44 2464 0060, இமெயில் மூலமாக help@snehaindia.org தொடர்பு கொள்ளலாம் அல்லது டாடா நிறுவனத்தின் 91529 87821 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம்.
| இதையும் படிங்க: சட்டப் பேரவை தேர்தலுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்... என்னென்ன தெரியுமா? |

